பாலிவுட் இயக்குநரிடம் ரூ.3கோடி கேட்டு கொலை மிரட்டல் - என்ஆர்ஐ பார்ட்னர்கள் மீது வழக்கு

பிரபல இந்திப்பட இயக்குநர் பிரகாஷ் ஜா. சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான 'ஆரக்ஷான்' படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியது.
இந்த நிலையில் பிரகாஷ் ஜா மும்பையில் உள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், "கடந்த 2004-ம் ஆண்டில் நானும், அமெரிக்காவின் நிiயார்க் நகரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோரும் இணைந்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டோம்.
அந்தப் படத்துக்காக நான் கதை கூட தயாரித்து விட்டேன். ஆனால் சில பிரச்சினைகளால் படத்தை எடுக்க முடியாமல் போய் விட்டது.
அந்த படத்துக்காக எனக்கு 50,000 டாலர்கள் (ரூ.24.5 லட்சம்) தந்தனர். படம் எடுக்க முடியாததால் பணத்தை நான் திருப்பி கொடுத்து விட்டேன்.
இந்தநிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோரிடம் இருந்து எனக்கு இ-மெயில் மற்றும் போனில் கொலை மிரட்டல்கள் வருகிறது.
எங்களுக்கு நீங்கள் 2 முதல் 3 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று அவர்கள் மிரட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக நிiயார்க்கில் வசிக்கும் என்னுடைய நண்பர் ஒருவரையும் அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள்.
எனவே பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
அவருடைய புகாரின் பேரில் வெளிநாடு வாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோருக்கு எதிராக அம்போலி உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர கானே வழக்குப்பதிவு செய்தார்.


Click it and Unblock the Notifications











