Siddharth - காவிரி பிரச்னை.. கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.. பிரகாஷ் ராஜ் ட்வீட்
சென்னை: Prakash Raj Apologize (பிரகாஷ் ராஜ் மன்னிப்பு) பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து கன்னட அமைப்பினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த் ஒரு மெகா ஹிட் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டக்கர் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண்குமார் இயக்க நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

பாராட்டை பெற்ற சித்தா: சித்தா திரைப்படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று புகழும் ரசிகர்கள் இது கண்டிப்பாக சித்தார்த்தின் பெயர் சொல்லும்படியான படம் என்று கூறிவருகின்றனர்.
கமல் ஹாசன் பாராட்டு: சித்தா படத்துக்கு சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அதன்படி கமல் ஹாசன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இறுதியில் அழுத்தத்துடன் ரசிகர்கள் வெளியே வராமல் இப்படி நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. மகாநதி படத்தைவிட இது நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேபோல் இயக்குநர் மணிரத்னமும் சித்தா படத்தை பாராட்டியிருக்கிறார்.
காவிரி பிரச்னை: சித்தா படம் கன்னட மொழியிலும் வெளியாகிறது. இதனையொட்டி சித்தார்த் அங்கு ப்ரோமோஷனில் ஈடுபடும்விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் . காவிரி பிரச்னையை மையமாக வைத்து கர்நாடகாவில் சில அமைப்பினர் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஒரு அமைப்பினர் சித்தார்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்தனர்.
உள்ளே வந்த அவர்கள் தமிழ் படத்துக்கு இங்கு ப்ரோமோஷன் நடத்தக்கூடாது என்று கூறினர். அவர்களுடன் நடிகர் சித்தார்த் சமரசமாக பேச முயன்றார். ஆனால் தங்களுடைய நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்த அவர்களோ சித்தார்த்தை வெளியேறும்படி சொன்னார்கள். சித்தார்த்தும் வேறு வழியில்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து பாதியில் வெளியேறினார்.
மன்னிப்பு: இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், "பல தலைமுறைகளாக தொடரும் இந்தப் பிரச்னையை தீர்க்க தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிய எம்.பிக்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படி தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள் சித்தார்த்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











