விஜய்யிடம் நாட்டின் தலை விதியை கொடுக்கலாமா?.. சகட்டுமேனிக்கு விளாசிய பிரகாஷ் ராஜ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துவருகிறார். அதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கிவரும் அந்தப் படத்தில் நடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி சென்று ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் விஜய். அவர் சென்னை திரும்பும்போது மதுரை விமான நிலையத்தில் அவரது பவுன்சர் ஒருவர் செய்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விஜய் கடைசியாக நடித்த GOAT,லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. வசூல் ரீதியாக அப்படங்கள் கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக பலத்த அடியையே வாங்கின. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என ஏராளமானோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் அரசியலுக்கும் வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போலவே அரசியலிலும் தன்னுடைய தாக்கத்தை வீரியமாகவே செலுத்த வேண்டுமென்பதில் மிக தீவிரமாக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அத்தனை பணிகளிலும் அவர் இறங்கிவிட்டார்.
திமுகவுடன் மோதல்: கட்சி ஆரம்பித்தவுடன் முதல் மாநாட்டிலேயே திமுகவை எதிர்க்க ஆரம்பித்தார். அடுத்தடுத்த கூட்டங்களிலும், விழாக்களிலும் அவர் மேடை ஏறி திமுக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அவர் அப்படி பேசுவதற்கு எதிர்வினையை திமுகவினர் காட்டிவந்தாலும்; அதற்கும் தவெகவினர் தொடர்ந்து பதிலடியும் கொடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் திமுக Vs தவெக என்ற நிலைமையில் பயணப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
தொடர்ந்து சர்ச்சைகள்: இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் கோவைக்கு சென்றார் விஜய். அப்போது அவரது தொண்டர்களாகிய ரசிகர்கள் செய்த செயல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இனி அவ்வாறு செயல்படக்கூடாது என்று சமூக வலைதளம் மூலம் அன்பு கட்டளையையும் விதித்தார் அவர். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக தாண்டிக்குடி சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அப்போது மதுரை விமான நிலையத்தில் விஜய்யை சந்திக்க வந்தவரின் தலையில் பவுன்சர் துப்பாக்கியை வைத்தது, பத்திரிகையாளர்களிடம் அத்துமீறி நடந்தது என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவருகின்றன.
பிரகாஷ் ராஜ் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபலமான இயக்குநர். அவர் தனது மகன் ஸ்டார் ஆவதற்கு முன்பாக நிறைய படங்களை எடுத்திருக்கிறார். விஜய் அரசியலுக்கு புதியவர். அவரை நான் அறிந்தவரையில் நாங்கள் அரசியலை பற்றி எல்லாம் தீவிரமாக பேசியதில்லை. தனக்கு இருக்கும் பிரபல்யத்தின் காரணமாக அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். பவன் கல்யாணும் அப்படித்தான்.
தெளிவான பார்வை இல்லை: விஜய்க்கோ, பவன் கல்யாணுக்கோ நாட்டில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை. புரிதலும் இல்லை. பவன் தனது கட்சியை தொடங்கி பத்து வருடங்கள் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்ததில்லை. அதேபோல் விஜய்யிடமும் அரசியல் குறித்த தெளிவான பார்வை இல்லை. விஜய்யோ, பவனோ தேர்தலில் ஒரு சில இடங்களை பெறலாம். ஆனால் அதற்கு பிறகு தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும்போது வசனங்களை கேட்பதுபோல்தான் இருக்கின்றன. அவருக்கு ஆழமான புரிதலே இல்லை. அவரை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது?" என்றார்.


Click it and Unblock the Notifications











