நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. காரணம் இளையராஜா, அவரது இசை!- பிரகாஷ் ராஜ்
மதுரை: இன்று நான் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு அய்யா இளையராஜாவும் அவரது இசையும்தான் காரணம் என்றார் நடிகர் - இயக்குநர் பிரகாஷ் ராஜ்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார்.

மதுரை மண்ணில் இதுவரை நடந்திராத அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியது. அத்தனை பேரும் ராஜாவின் இசை - வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்து இசையை ரசித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ''நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...'' என்று கார்த்திக் ராஜா பாட, இசை நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் பலத்த கரவொலிகளுக்கிடையே தோன்றிய இளையராஜா ''ஜனனி ... ஜனனி..' பாடலைப் பாட ஆரம்பிக்க மக்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன், யுவன் சங்கர் ராஜா, பாடகிகள் சித்ரா, பவதாரிணி, பிரியா உள்பட பல பாடகர், பாடகிகள் இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை பாடி அரங்கையே அதிர வைத்தனர்.
மொத்தம் 32 பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டன. கடைசி நிமிடம் வரை அமர்ந்திருந்து பாடல்களை ரசித்துக் கேட்டனர் மதுரை ரசிகர்கள்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, ''அய்யாவின் (இளையராஜா) பாடலை நேரடியாக கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். நடிகராக இருந்து டைரக்டராகியும் இருக்கிறேன். நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் மதுரை மல்லிகை பூ, இட்லி பற்றி பாட்டு போட்டு இருக்கிறார்.
தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார். இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார்,' என்றார்.


Click it and Unblock the Notifications