15 ஆண்டுகளாக உற்ற துணை ஒன்றுடன் சினிமா பயணம்: பிரசன்னா சொல்லும் அந்து துணை யார்?
சென்னை: 25வது படத்தில் நடித்து முடித்துள்ள பிரசன்னா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா நடித்த திருட்டுப் பயலே 2 அவருக்கு 25வது படம். அந்த படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் பிரசன்னா. படத்தை பார்த்தவர்கள் பிரசன்னாவின் நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜவான்
கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "திருட்டுபயலே 2 " என் இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த "ஜவான்" என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நன்றி
மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக "5ஸ்டார்" படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.

பாராட்டுகள்
எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி இணையதள ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் பெரும் உந்து சக்தி எனக்கு. சில நேரங்களில் சில ஊடகங்கள் என்னைக் காயப்படுத்தியதும் உண்டு. அக்காயங்கள் என்னை மேலும் வலுவுடன் போராடவே உதவியுள்ளது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் எதிர்கொள்ள பழக்கப்படுத்தியுள்ள அக்காயங்களுக்கும் பெருநன்றி.

ரசிகர்கள்
15 ஆண்டுகால இப்பயணம் பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற துணை ஒன்று என் படங்களை பார்த்து ரசித்து பாராட்டி எப்போதும் மனதிலே நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்த ரசிகர்கள்தான் அந்தத் துணை. ஆண்டுகள் கடந்தும் என் படங்களை நினைவுகூர்ந்து பாராட்டி ஒவ்வொரு புது முயற்சியிலும் தோள்தட்டி, எனக்கான உயரம் பெரிதென்றும் அதற்க்கான அங்கீகாரம் கிடைக்குமென்றும் எப்போதும் சொல்லிச்சொல்லி துணை நின்றிருக்கும் என் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் இதயத்தின் அடித்தளத்தினின்று.

மனைவி
எனக்காக எப்போதும் பிரார்த்திக்கும் அம்மா அப்பா தம்பிக்கும், யாரையும்விட என்னை முழுமுற்றிலும் நம்பி என் போராட்டங்களிலெல்லாம் கேள்வியின்றி துணை நின்று பலம் சேர்த்த அன்பு மனைவிக்கும், குடும்பத்தாருக்கும், என் நலனில் அப்போதும் அக்கறையுள்ள நண்பர்களுக்கும் நன்றி சொல்லி தீராது என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











