Prashanth Neel: “நான் நல்ல கணவன் கிடையாது.. அழுதால் மட்டும் தான் அது நடக்கும்” பிரசாந்த் நீல் ஓபன்!
சென்னை: உக்ரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரசாந்த் நீல். தொடர்ந்து கேஜிஎஃப் சீரிஸில் இரண்டு பாகங்கள் இயக்கிய அவர், தற்போது சலார் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், "நான் நல்ல கணவன் கிடையாது" என பிரசாந்த் நீல் ஓபனாக சில உண்மைகளை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் நல்ல கணவன் கிடையாது
பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று முதல் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரசாந்த் நீல் - பிரபாஸ் காம்போ என்பதாலேயே சலார் படத்துக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னட இயக்குநரான பிரசாந்த் நீல், உக்ரம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2014ம் ஆண்டு வெளியான உக்ரம் திரைப்படம் பிரசாந்த் நீலுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. ஆனால் அவரை உலகளவில் பிரபலமாக்கியது கேஜிஎஃப் தான். சீரியல் நடிகராக அறிமுகமாகி சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த யாஷ், கேஜிஎஃப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் யாஷ் பான் இந்தியா அளவில் மாஸ் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார்.
அந்தளவுக்கு கேஜிஎஃப் படத்தை இயக்கியிருந்தார் பிரசாந்த் நீல். அதேபோல் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஒட்டுமொத்தமாக இந்திய பாக்ஸ் ஆபிஸையே அதகளப்படுத்தியது. உக்ரம், கேஜிஎஃப் என மொத்தமே மூன்றே படங்களில் முன்னணி ஹீரோக்களின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறினார் பிரசாந்த் நீல். அப்படித்தான் பிரபாஸுடன் சலார் படத்திலும் இணைந்தார். அடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படத்தையும் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் நேற்று வெளியான சலார், முதல் நாளில் 175 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படம் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் காட்டும் என சினிமா விமர்சகர்கள் அடித்துக் கூறியுள்ளனர். அதேபோல் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்தடுத்த படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சலார் படத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் ஓபனாக பேசியுள்ளார். அதாவது சலார் படப்பிடிப்பால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "சலார் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது என்னுடைய குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை."
"குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை பார்க்க எனது வீட்டுக்குச் சென்று வந்தேன். நான் ஒரு சரியான தந்தையாகவோ அல்லது கணவனாகவோ இல்லை" என பிரசாந்த் நீல் மனம் திறந்துள்ளார். பிரசாந்த் நீல் இப்படி மனம் திறந்து பேசியது திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டிஆர் இணையும் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் சலார் 2ம் பாகமும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











