விஜய் வெளியிட்ட அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. பிரசாந்த் டான்ஸில் பிச்சு எடுக்குறாரே ப்பா
சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜய் இன்று வெளியிட்டார்.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.
சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.
ரீ என்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படம் ஹிந்தி படமான அந்தாதூன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகரும் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குகிறார். ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும் படம் ரிலீஸாகமாலேயே இருந்தது. சூழல் இப்படி இருக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அந்தப் பாடலை விஜய்யும், பிரபுதேவாவும் சேர்ந்து வெளியிட்டார்கள். இந்தப் பாடலை அனிருத்தும், விஜய் சேதுபதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலும் லிரிக்கல் வீடியோவில் பிரசாந்த்தின் நடனம் பட்டையை கிளப்புவதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கு என்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அந்தகன் படத்தின் திரையிடலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











