தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்!
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல் நலம்பெற பிரார்த்திக்குமாறு அவர் மகன் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, முந்தானை முடிச்சு, வெற்றி விழா, நடிகன், ஜீன்ஸ் உள்பட ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அசோக்குமார். இந்தி, தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

தம்பிக்கு ஒரு பாட்டு, அன்று பெய்த மழையில், காமாக்னி, அபிநந்தனா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக இவர் உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் அசோக்குமார்.

அவர் உடல்நிலை விரைந்து குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு திரையுலகினரையும் நண்பர்களையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் மகன் ஆகாஷ்.
"என் தந்தைக்கு சினிமாதான் முதல் குடும்பம், பிறகுதான் நாங்கள் எல்லாம். எனவே அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்..." என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் ஆகாஷ்.


Click it and Unblock the Notifications











