நீ வெறும் நடிகை தானே, உன்னை காணாமல் போய்விடச் செய்வேன் என வாடியா மிரட்டினார்: ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: என்னை காணாமல் போகச் செய்ய முடியும் என்று தொழில் அதிபர் நெஸ் வாடியா மிரட்டினார் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ப்ரீத்தி தனது புகாரில் கூறியிருப்பதாவது,

எனக்கு நெஸ் வாடியாவை 10 ஆண்டுகளாக தெரியும். அவரை காதலித்து வந்தேன். ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். காதல் முறிவுக்கு பிறகு நாங்கள் இருவரும் கிங்ஸ் XI அணியின் உரிமையாளர்கள் என்ற முறையில் மட்டுமே பேசி வந்தோம். தற்போது நாங்கள் பேசிக் கொள்வதே இல்லை. வேலை தொடர்பாக எங்களுக்கு இடையே இரண்டு முறை சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாடியா என்னை தரக்குறைவாக திட்டி, மோசமாக நடந்து கொண்டதால் நான் என் குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் முன்பு அசிங்கப்பட வேண்டியதாகிவிட்டது. இது சரியில்லை என்று அப்போதே நான் அவரை எச்சரித்தேன்.
கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நெஸ் வாடியா என்னிடம் வந்து நீ வெறும் நடிகை, நான் அதிகாரமிக்க நபர் உன்னை காணாமல் போகச் செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து தான் அவர் மீது புகார் கொடுக்க முடிவு செய்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நெஸ் வாடியா மீது ஏற்கனவே ஏன் புகார் அளிக்கவில்லை என்று ப்ரீத்தியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பிரச்சனை வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











