அன்று நான் செய்த தவறு.. என் புள்ளைய பாத்துக்கோங்க.. இசைவெளியீட்டு விழாவில் கண்கலங்கிய பிரேமலதா!
சென்னை : கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் படைத்தலைவன். இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், சண்முக பாண்டியன், யாமினி, கஸ்தூரிராஜா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.வி ஜே கம்பைன்ஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பிரேம லதா பேசினார்.
அதில், பல அரசியல் மேடைகளில் நான் கலந்து கொண்டு பேசியதை பலர் பார்த்திருப்பீர்கள், ஆனால், சினிமா மேடையில் அதுவும் ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசுவது இதுதான் முதல் முறை. சகாப்தம் திரைப்படம் வெளியான போது, கேப்டன் அவர்கள் இருந்தார். அந்த விழாவில் என்னை பேசுமாறு அவர் அழைத்தார். ஆனால், நான் பேசவில்லை என்று மறுத்துவிட்டேன். அன்று ஏன் பேசவில்லை என்று இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன். அப்போது, கேப்டன், சண்முகப்பாண்டியனின் அம்மாவாக நீ மேடையில் அவனை வாழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆனால், அன்றைக்கு சினிமா விழாவில் எதற்கு நாம் பேச வேண்டும் நினைத்து மறுத்து விட்டேன். ஆனால், இன்று நான் சண்முக பாண்டியனின் அம்மாவாக மட்டுமில்லாமல், உங்களின் சகோதரியாக கேப்டனை பெற்றெடுத்த சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.

பிரேம லதா: கேப்டன் அவர்களுக்கு இரண்டு தொழில் ஒன்று சினிமா மற்றொன்று அரசியல். எனக்கு இரண்டு மகன்கள் பிறந்த போதே நானும் கேப்டனும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். அப்பாவின் சிங்கம் பாதையில் விஜய் பிரபாகரன் அவர்களும், யானை பாதையில் சண்முகப்பாண்டியன் அவர்களும் பயணம் செய்து அப்பாவின் கனவு, இலட்சியத்தை நிச்சயமாக வென்று எடுப்பார்கள் என்பதில் ஒரு அம்மாவாக எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஏனென்றால், கேப்டனும் நானும் அவர்கள் இருவரையும் அப்படித்தான் வளர்த்து எடுத்தோம். விஜய பிரபாகரன் அவர்களை சண்முக பாண்டியன் அண்ணா என்று தான் அழைக்க வேண்டும். அதில், கேப்டன் எப்பொழுதுமே தெளிவாக இருப்பார். இன்றைய வரையிலும் சண்முக பாண்டியனும் பிரபாகரனை அண்ணா என்றுதான் அழைப்பார். ஏனென்றால் அந்த அன்பு அந்த மரியாதை இருந்தால் மட்டும்தான் இணைந்து பல சாதனைகளை செய்ய முடியும் என்று கேப்டன் அவர்கள் நம்பினார்.
அன்பாக வளர்த்தார்: கேப்டனின் மகன்கள் இருவரும் அவரைப்போலவே எளிமையாக பழகுகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள். இன்றைக்கு மட்டுமல்ல அவர்கள் இருவரும் உச்சத்தை தொட்டாலும் அப்போதும் அவர்கள் எளிமையுடன் தான் மற்றவர்களிடம் பழகுவார்கள். கேப்டன் அவர்கள் தனது மகன்களுக்கு பல நல்ல விஷயத்தை சொல்லி கொடுத்து மிகவும் அன்பாக வளர்த்தார். அவர் இல்லாததை இருவரும் மிகவும் மிஸ் செய்கிறார்கள். கேப்டன் விட்டுவிட்டு சென்ற இடத்தை, சினிமாவில் சண்முகப்பாண்டியனும், அரசியலில் விஜயபிரபாகரனும் நிரப்புவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று பிரேம லதா பேசி இருந்தார். இந்த இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, முருகதாஸ், சசிக்குமார், பொன்ராம் மற்றும் படைத்தலைவன் திரைப்படத்தில் நடித்த நடிகர்,நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











