அவர் பிறவி கலைஞன்யா.. வாய்ப்பு கொடுங்க.. இவ்வளவுக்கு பிறகும் வடிவேலுவுக்காக வருத்தப்பட்ட விஜயகாந்த்
சென்னை: Vadielu, Vijayakanth (வடிவேலு, விஜயகாந்த்)வடிவேலு குறித்து விஜயகாந்த் சொல்லியதாக பிரேமலதா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அலை கோலிவுட்டில் பலமாக அடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார்.

தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
டாப் ஹீரோவான விஜயகாந்த்: தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.
உதவிய விஜயகாந்த்: விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் வாங்கிய கடனை அடைத்து வருவாயையும் அதிகரித்தார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பலருக்கு பல சமயங்களில் உதவியிருக்கிறார். ஹீரோவாக அறிமுகமாகி இப்போது குணசித்திர நடிகராக வலம் வரும் ஷ்யாமைக்கூட ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு Vs விஜயகாந்த்: இதற்கிடையே வடிவேலு ஒரு அரசியல் கட்சி மேடையின் மேலே ஏறியதால் விஜயகாந்த்திற்கும் வடிவேலுவுக்கும் ஒரு பிரச்னை உருவானது. வடிவேலு விஜயகாந்த்தை ரொம்பவே தாக்கி பேசினார். இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவின் கிரேஸ் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் வடிவேலுவை தமிழ் சினிமாவில் காணவே முடியவில்லை. ஒரு வழியாக வடிவேலுவின் பஞ்சாயத்து முடிந்து மாமன்னன் படத்தில் நடித்து அப்ளாஸையும் அள்ளினார்.
பிரேமலதா பேட்டி: இந்தச் சூழலில் பிரேமலதா ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் நடந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா,"வடிவேலு விஜயகாந்த்தை எவ்வளவோ பேசியிருக்கிறார். ஆனால் விஜயகாந்த்தோ வடிவேலுவை ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை. அதுதான் லீடர். இன்னும் சொல்லப்போனால் நான் அருகில் இருந்தேன் அப்போது விஜயகாந்த் தனக்கு தெரிந்தவர்களிடம் யோவ் வடிவேலு பிறவி கலைஞன்யா அவருக்கு வாய்ப்பு கொடுங்க. அவரு நடிக்காம இருந்தா தமிழ் சினிமா இழந்துரும் என என்னிடம் சொன்னார்" என பிரேமலதா கூறினார். இந்தப் பேட்டி இணையத்தில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











