பிரேம்ஜி - இந்து திருமணத்தில் இப்படி ஒரு பிரச்னையா?.. வெங்கட் பிரபு வேற லெவலா செஞ்சிருக்காரே
சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடந்து முடிந்த அவர்களது திருமணத்தில் குறிப்பிட்ட அளவினரே கலந்துகொண்டார்கள். அதேசமயம் பிரேம்ஜியின் நண்பர்களான ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ் உள்ளிட்டோர் தவறாமல் கலந்துகொண்டார்கள். திருமண ஏற்பாடுகளை வெங்கட் பிரபுவே முன்னால் நின்று செய்துவைத்தார். இந்தச் சூழலில் இந்து அளித்திருக்கும் பேட்டியில் வெங்கட் பிரபு பற்றி பேசியிருக்கிறார்.
கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். அவர் கடைசியாக விஜய் நடித்த GOAT படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் பிரேம்ஜி நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரமும் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. முக்கியமாக பிரேம்ஜியின் கதாபாத்திரம் அவரை வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருந்த மற்ற படங்களின் கேரக்டர்கள் போலவே இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள்.

சிங்கிள் டூ மிங்கிள்: இதற்கிடையே பிரேம்ஜி அமரன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவந்தார். மேலும் தான் ஒரு முரட்டு சிங்கிள் என்றெல்லாம் பல பேட்டிகளில் பேசிவந்தார். அவரது திருமணம் பற்றி வெங்கட் பிரபுவிடம் கேட்டாலும் அவரும் மழுப்பலான பதிலையே கொடுத்தார். இதனால் பிரேம்ஜிக்கு கடைசிவரை திருமணமே ஆகாதோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். சூழல் இப்படி இருக்க தனது சகோதரருக்கு திருமணம் என்று வெங்கட் பிரபு அறிவித்தார்.
காதல் திருமணம்: யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரேம்ஜிக்கு காதல் திருமணம் நடந்தது. அவர் இந்து என்ற பெண்ணை காதலித்தார். சமூக வலைதளம் மூலம் அவர்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்து தனியார் வங்கி ஒன்றில் முக்கியமான பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இரு வீட்டு சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் திருத்தணியில் மிக எளிமையாக நடந்தது. அதில் பிரேம்ஜி - வெங்கட் பிரபுவுக்கு நெருக்கமானவர்களும், இந்து வீட்டிலிருந்து சிலரும் கலந்துகொண்டார்கள்.
இளையராஜா கொடுத்த பரிசு: அதேசமயம் அவர்களின் திருமணத்தில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு பிரேமையும், இந்துவையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து, ஆசீர்வதித்து சர்ப்ரைஸாக ஒரு பரிசையும் கொடுத்தார் ராஜா. அதனை மிக பெருமையாக இந்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு குறித்தும் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்துவின் பேட்டி: அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் திருமணம் நடப்பதற்கு முக்கிய காரணமே வெங்கட் பிரபுதான். எனக்கு அப்பா இல்லாத ஸ்தானத்தையும் பிரேமுக்கு அம்மா இல்லாத ஸ்தானத்தையும் பூர்த்தி செய்து அப்பா - அம்மா ஸ்தானத்தில் நின்று எங்களது திருமணத்தை வெங்கட் நடத்தி வைத்தார். இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் எங்களது உறவுக்காரர்கள்கூட கெஸ்ட் போன்றுதான் வந்து சென்றார்கள். ஆனால் வெங்கட் அண்ணாவோ ஒரே ஆளாக முன்னாடி நின்று அனைத்தையும் செய்தார். எங்கள் இரண்டு பேர் மீதும் அப்படியொரு பாசத்தை அவர் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











