அண்ணன் தாலி எடுத்து கொடுக்க.. இந்துவை கரம்பிடித்தார் நடிகர் பிரேம்ஜி!
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் கலக்கி வந்த பிரேம்ஜி தனது காதலி இந்துவை கரம் பிடித்தார். இவர்களுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இவர்களின் திருமண புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1970 களில் தொடங்கி தற்போது வரை பயணித்து வருபவர் கங்கை அமரன். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுவரில்லாத சித்திரங்கள், வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் மகன் வெங்கட் பிரபு நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் பிரேம்ஜி: கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜி அமரனும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, சென்னை 28 படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம் ஜி நடித்திருந்தார். மற்ற படத்தில் நடிப்பதைவிட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது.
இந்துவை கரம் பிடித்தார்: வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில், இதுவரை முரட்டு சிக்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன் திருமணம் நடந்து முடிந்தது. அண்ணன் வெங்கட் பிரபு தாலி எடுத்து கொடுக்க பிரேம்ஜி, இந்து கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிட் விட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்து யார் தெரியுமா? பிரேம்ஜி திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல் வெளியானதும், பலரும் யார் அந்த பெண், நடிகையா என கேட்டு வந்தனர். மீடியாவை சேர்ந்தவர் இந்து என கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றார் வெங்கட் பிரபு. இந்து வங்கியில் வேலை செய்து வருகிறாராம். அவரும், பிரேம்ஜியும் எங்கு, எப்பொழுது, எப்படி சந்தித்து காதலில் விழுந்தார்கள் என்கிற விபரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பிரேம்ஜியிடம் முதலில் காதலை சொன்னது இந்து தானாம். . நீ காதலை சொல்ல மாட்ட என இந்துவே காதலை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











