இது வெட்கக்கேடு.. மகள் பெயரில் போலி கணக்கு.. பிரபல நடிகர் பிருத்விராஜ் திடீர் எச்சரிக்கை!
கொச்சி: தனது மகள் பெயரில் இன்ஸ்டாவில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அதை நம்ப வேண்டாம் என்றும் நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
பிரபல மலையாள ஹீரோ பிருத்விராஜ். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
இப்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வரும் பிருத்வி ராஜ், இதன் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்றபோது லாக்டவுனால் அங்கு சிக்கிக்கொண்டார்.

சிறப்பு விமானம்
அவருடன் சென்ற சுமார் 58 பேரைக் கொண்ட மொத்தப் படக்குழுவும் சிக்கியது. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினர். இவர், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
இவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என வந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் குணமானார். இவர் இப்போது ரசிகர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

மகள் பெயரில்
அதில், அவருடைய 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு இருப்பதாகவும் அதை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இது எங்களால் நிர்வகிக்கப்படும் பக்கம் அல்ல. என் 6 வயது மகள் இப்படி ஒரு பக்கத்தை கொண்டிருக்க அவசியமும் இல்லை. வளர்ந்த பிறகு அவள் தீர்மானிக்க முடியும்.

இரையாக வேண்டாம்
எனவே, இதை உண்மை என்று நம்பி, இந்த போலி கணக்குக்கு இரையாக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு வெட்கக் கேடானது என்றும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி உள்ளார். இதற்கு பலர் அது போலி கணக்கு என்பது தெரியும் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











