நுரையீரலில் பாதிப்பு.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயச்சந்திரன் காலமானார்.. நடிகர் பிருத்விராஜ் இரங்கல்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 52.
சினிமா உலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் என பலரும் தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாகவும் கொரோனாவுக்கும் பலியாகி வருகின்றனர்.
150 படங்களுக்கு மேல் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய ஜெயச்சந்திரனின் மறைவுக்கு நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட மலையாள சினிமா நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்
மலையாள திரையுலகின் பிரபல ஒப்பனை கலைஞரான மோகன் தாஸிடம் உதவி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக திரைத்துறையில் அறிமுகமானவர் ஜெயச்சந்திரன். 150க்கும் மேற்பட்ட படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து மலையாள திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களையும் அழகுப்படுத்தி உள்ளார்.

நுரையீரல் பாதிப்பு
52 வயதாகும் இவர், கடந்த இரண்டு மாதங்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்த சூழலில் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

மாநில விருது
150க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களுக்கு ஒப்பனை செய்து வந்த இவர், கடந்த 2002ம் ஆண்டு நடிகர் திலீப் நடிப்பில் வெளியான குபேரன் படத்திற்காக சிறந்த ஒப்பனை கலைஞருக்கான கேரள அரசின் மாநில விருதை வென்றார். மேலும், ஏகப்பட்ட தொலைக்காட்சி விருதுகளையும் வென்றுள்ளார். ஃபிளவர்ஸ் டிவியின் மூத்த மேக்கப் கலைஞராக கடந்த 5 ஆண்டுகளாக இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

பிருத்விராஜ் இரங்கல்
சமூக வலைதள பக்கமே இரங்கல் தெரிவிக்கும் பக்கமாக மாறிவிட்டதே என வருத்தம் தெரிவித்திருந்த நடிகர் பிருத்விராஜ், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயச்சந்திரன் உயிரிழந்த செய்தியை பகிர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், ஏகப்பட்ட மலையாள நடிகர்களும், ரசிகர்களும் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











