சச்சின் கண்டிப்பா மறந்திருப்பார்... ஆனா என் வாழ்க்கையில அதை மறக்கவே முடியாது... பிருத்விராஜ் ஃபீலிங்
கொச்சி: அந்த சம்பவத்தை சச்சின் டெண்டுல்கர் வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஆனால், என்னால் மறக்கவே முடியாது நடிகர் பிருதிவிராஜ் சொன்னார்.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

இயக்குனர்
இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது. அடுத்து எம்புரான் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

மறக்க முடியாத...
சினிமாவுக்கு சில மாதங்கள் பிரேக் விட்டுள்ள பிருத்விராஜ், கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தன்னால் மறக்கவே முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிட்டார்.

மறந்துடுவோம்
அவர் கூறும்போது, நாங்கள் நடிகர்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 200 புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருப்போம். விளையாட்டு வீரர்களும் அப்படித்தான். ஆனால், அதை நாங்கள் மறந்துவிடுவோம். ஆனால் எடுத்தவரால் அதை மறக்க முடியாது.

சச்சினின் ரசிகன்
எனக்கும் ஒரு ரசிகனாக இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். அவர் பற்றி பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவரிடம் பேசியதில்லை. ஒரு முறை கொச்சியில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறியிருந்தேன்.

தயக்கம்
என் அருகில் சச்சின் வந்து அமர்ந்தார். என்னால் நம்பமுடியவில்லை. என்னதான் அவரது தீவிர ரசிகராக இருந்தாலும், அவரிடம் பேச எனக்குத் தயக்கம் இருந்தது. பிறகு ஒரு வழியாக சமாளித்து பேசத் தொடங்கினேன். மும்பை வரை பேசிக்கொண்டே போனேன்.

ஞாபகம் இருக்குமா
மும்பை விமான நிலையத்தில் பிறகு பிரிந்துவிட்டோம். இந்த சம்பவம் நிச்சயமாக சச்சினுக்கு ஞாபகம் இருக்குமா தெரியாது. ஆனால், ஒரு ரசிகனாக என் வாழ்க்கையில் இதை மறக்கவே முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications











