தியேட்டரில் அதிரடி காட்டும் ஆடுஜீவிதம்.. படுவேகமாக 100 கோடியை தொட்டது!
சென்னை: இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் த கோட் லைஃப் ஆடு ஜீவிதம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.
பிரித்விராஜ் அமலா பால் நடிப்பில் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியானது. தியேட்டரில் வெளியான முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிக அளவில் இருந்தது.

ஆடு ஜீவிதம்: வறுமையில் வாடும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நஜீப், தனது மனைவிக்காகவும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நண்பர் ஒருவரின் உதவியை பெற்று, அரபுநாட்டுக்கு வேலை தேடி செல்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக பாலை வனத்தில் ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட கைதியாக வாழ்க்கையை வாழுகிறான். கேரளாவில் எங்கு பார்த்தாலும் தண்ணீர், பசுமை, மழை என பச்சை பசேல் என பார்த்தவனுக்கு, சுடும் மணல், குடிக்க தண்ணீர் அல்லாத பொட்டல்காட்டில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைக்கு உள்ளாகி தவிக்கிறான்.
உணர்வு பூர்வமான கதை: இப்படி வாழ்க்கை வாழ்வதை விட சாவதே மேல் என, பாம்புகள் உலாவும் இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற போதும், தன் மனைவியை நினைத்து அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறான். கடைசியில் நஜீப் அந்த நரக வாழ்க்கையில் இருந்து மீண்டாரா இல்லை என்பதுதான் ஆடு ஜீவிதம் படத்தின் கதை. படம் பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கும் கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் அழகாக நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்த்து இருக்கிறார். அனைத்து திசைகளில் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
குவியும் பாராட்டு: முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அதை தொடர்ந்து படம் வெளியான பிறகு மாதவன், யோகி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டினர். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
சாதனை படைத்த ஆடுஜீவிதம்: ஆடுஜீவிதம் படம் வெளியாகி நேற்றோடு 9 நாட்கள் ஆகி உள்ள நிலையில், நேற்றைய தினம் மட்டும் இப்படம் 3.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 47 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்றைக்கு இந்தப்படம் 50 கோடிக்கு எட்டி விடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல உலகளவில் பார்க்கும் போது, ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











