24 பட இயக்குநருடன் இணையும் நாக சைத்தன்யா... அட இவங்களும் இருக்காங்களா!
ஐதராபாத் : 24, மனம், யாவரும் நலம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன்மூலம் தென்னிந்திய அளவில் முக்கிய டைரக்டராக உள்ளார் விக்ரம் குமார்.
இவரது இயக்கத்தில் நாக சைத்தன்யாவின் தேங்க்யூ படம் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நாக சைத்தன்யாவை வைத்து வெப் தொடர் ஒன்றையும் விக்ரம் குமார் இயக்கவுள்ளார்.

இயக்குநர் விக்ரம் குமார்
சிலம்பரசனின் அலை படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்ரம் குமார். தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 24 படம், மாதவனின் யாவரும் நலம் உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இதில் யாவரும் நலம் படம் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக வெளியானது.

தெலுங்கில் சிறப்பான இயக்குநர்
தொடர்ந்து தெலுங்கில் இவர் மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைத்தன்யா மற்றும் அகில் ஆகியோரை வைத்து எடுத்திருந்த மனம் படமும் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தையடுத்து தெலுங்கு ரசிகர்கள் இதயத்தில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டார் விக்ரம் குமார்.

நானியின் கேங் லீடர்
இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானதையடுத்து தெலுங்கில் நானி நடிப்பில் கேங் லீடர் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நானி கேரியரில் இந்தப் படம் முக்கியமான படமாக உள்ளது. இதையடுத்து தற்போது நாக சைத்தன்யா நடிப்பில் தேங்க்யூ படத்தை இயக்கி வருகிறார் விக்ரம் குமார்.

இந்த ஆண்டு ரிலீஸ்
இந்தப் படம் இந்த ஆண்டிற்குள் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே கூட்டணி மீண்டும் வெப் தொடருக்காக இணைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில், இந்த தொடருக்கு தூதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் நாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரியா, பார்வதி நடிப்பு
இந்த தொடரில் தற்போது பிரியா பவானி சங்கர், பார்வதி இணைந்துள்ளனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார். மேலும் தான் பார்வதியின் ரசிகை என்றும் குறிப்பிட்டுள்ளார். புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











