ப்ரியா பவானி சங்கருடன் கிசுகிசு.. மீண்டும் ரிப்பீட்டா?.. எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன் இதுதான்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து எல்ஐசி, சர்தார் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் எஸ்.ஜே.சூர்யா பற்றி ப்ரியா பவானி சங்கர் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.
எல்லாம் கனவு: ஒரு இயக்குநருக்கு தனது கதை மேல் எவ்வளவு நம்பிக்கை வேண்டுமோ அதைவிட அதிக நம்பிக்கை தனது திரைக்கதை மீது வேண்டும். அப்படி அவர் எடுத்த படம்தான் இசை. பல வருடங்களுக்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் அவரே தயாரித்த அந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுக்கு இடையே நடந்த மோதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. படம் முழுக்க விறுவிறுப்பாக கொண்டு சென்று கடைசியில் எல்லாமே கனவு என்று முடித்தது அப்ளாஸை அள்ளியது. அப்படத்துக்காக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்திருந்தார்.
நடிகராக கலக்கிய சூர்யா: கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான ராயன், இந்தியன் 2 ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. இந்தியன் 2 மட்டும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக எல்ஐசி, சர்தார் 2 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.
கிசுகிசு: இதற்கிடையே ப்ரியா பவானி சங்கருடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்ததால் அவரையும், சூர்யாவையும் வைத்து கிசுகிசுக்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து பேசிய ப்ரியா பவானி சங்கர், "மான்ஸ்டர் படத்தில் நடித்த பிறகு பொம்மை படத்தை எஸ்.ஜே.சூர்யா தயாரித்தார். ராதாமோகன் சாரும், எஸ்.ஜே.சூர்யாவும் நான் இதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். நானும் நடித்தேன். ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வைத்து பேசினார்கள். அதனை கேள்விப்பட்ட எஸ்.ஜே.சூர்யா என்னிடம், 'இத்தனை வருஷமா மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடந்து இப்போதான் எழுந்து வரேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா' என்று ஜாலியாக கூறினார் " என்றார்.


Click it and Unblock the Notifications











