மோகன் லாலின், 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' ரிலீஸ் எப்போது? இயக்குனர் பிரியதர்ஷன் புது தகவல்!
சென்னை: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதற்கு அதன் இயக்குனர் பதிலளித்துள்ளார்.
மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.
16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ்
இதில், குஞ்சலி மரைக்காயராக பிரபல ஹீரோ மோகன்லால் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

அரபிக்கடலின் சிங்கம்
தமிழ், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில், 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற பெயர் வைத்துள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர், 'சிறைச்சாலை படத்துக்குப் பிறகு மீண்டும் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

போர்க் காட்சிகள்
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டிரைலர் வெளியானது. கடலும் கப்பலும் போர்க்காட்சிகளும் என மிரட்டிய டிரைலரைப் பார்த்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன்லாலைப் பாராட்டி இருந்தார். இந்தப் படம் இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.

அதுதான் முக்கியம்
கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றி, இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். அதாவது, முதலில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவேண்டும். இப்போதைக்கு அதுதான் முக்கியம். அதற்குப் பிறகுதான் படத்தின் ரிலீஸ் பற்றி பேச வேண்டும் என்று தயாரிப்பாளர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











