Parineeti Chopra Engagement - களைகட்டும் பரிணிதி சோப்ரா நிச்சயதார்த்தம் - டெல்லி வந்தார் ப்ரியங்கா சோப்ரா
டெல்லி:Parineeti Chopra Engagement (பரிணிதி சோப்ரா நிச்சயதார்த்தம்) பரிணிதி சோப்ராவுக்கும், ராகவுக்கும் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து நடிகை ப்ரியங்கா சோப்ரா டெல்லி வந்தார்.
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. 2011ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து டிவியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.

பரிணிதி சோப்ராவின் காதல்: இந்நிலையில் பரிணிதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. இருவரும் ஒன்றாக வெளியில் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ஆனால் இருவரும் அதுகுறித்து மௌனம் காத்தனர். அண்மையில் நாடாளுமன்றத்துக்கு வந்த ராகவ்விடம் இதுகுறித்து கேட்டபோதுகூட அவர் வெட்கப்பட்டுக்கொண்டே சென்றுவிட்டார்,
உறுதியான நிச்சயதார்த்தம்; குவிந்த வாழ்த்து : இரண்டு பேரும் வாய் திறக்காமல் இருந்தாலும் அவர்கள் காதலிப்பது உறுதிதான் என பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு பேருக்கும் இன்று டெல்லியில் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் பரிணிதி சோப்ராவுக்கும், ராகவ்வுக்கும் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
களைகட்டும் நிச்சயதார்த்த விழா: பரிணிதி சோப்ராவுக்கும், ராகவ்வுக்கும் இன்று மாலை டெல்லியில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்த்கொள்ளவிருக்கின்றனர். ராகவ் எம்.பி என்பதால், இந்த நிச்சயதார்த்தத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிச்சயதார்த்ததில் கலந்த்கொண்டு பரிணிதி - ராகவ் ஜோடியை வாழ்த்த இருக்கிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

என்ன உடை அணிய போகிறார்கள்: பஞ்சாபி முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டை பரிணிதியின் சகோதரர்களான சகாஜ் மற்றும் சிவாங் முழு மூச்சில் கவனித்துவருகின்றனர். பரிணிதி சோப்ரா, மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருக்கும் ஆடையையும், ராகவ் அவரது உறவினரான பேஷன் டிசைனர் சச்தேவா வடிவமைத்திருக்கும் ஆடையையும் நிச்சயத்தார்த்தத்தில் அணிய இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி வந்த ப்ரியங்கா சோப்ரா: இந்நிலையில் தனது தங்கையின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக நடிகை ப்ரியங்கா சோப்ரா லண்டனிலிருந்து டெல்லி வந்திறங்கினார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம் ப்ரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனாஸ் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவில்லை. லண்டனில் இன்று 'தி ஆல்பம்' என்ற புதிய ஆல்பம் வெளியிடப்படுவதால் நிக் ஜோனாஸால் கலந்துகொள்ள முடியவில்லை என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











