கங்கனா, ரங்கோலிக்கு எதிரான வழக்கு.. விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!
மும்பை: நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர், தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

சகோதரி ரங்கோலி
விஜய் இயக்கியுள்ள இதன் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நடிகை கங்கனாவும் அவர் சகோதரி ரங்கோலியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களுடைய கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையாகி பிரச்னையாக மாறிவிடுகிறது.

இரு சமூகத்தினர்
வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு
அலிப் காசிப் கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர், அம்போலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அடுத்து, கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது மும்பை பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து இருந்தனர்.

விசாரணை அறிக்கை
அவர்கள் மீதான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், கடந்த மாதம் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அம்போலி கோர்ட்
பின்னர் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யகோரி கங்கனாவும் ரங்கோலியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு அம்போலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. போலீசார், கோர்ட் வழங்கிய குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

விசாரணை விவரம்
இதுதொடர்பான விசாரணையின் போது, கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது வரை இந்த வழக்கில் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தையும் நீதிமன்றம் கேட்டுள்ளது. பின்னர் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











