'எனக்காக உருவாக்கிய கதையை உதயநிதியை வைத்து படமாக்குகிறார்'... மிஷ்கின் மீது நடிகர் புகார்!
இயக்குனர் மிஷ்கின் மீது புதுமுக நடிகர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாகக் கூறி பணம் வாங்கிவிட்டு, இயக்குனர் மிஷ்கின் ஏமாற்றிவிட்டதாக புதுமுக நடிகர் மைத்ரேயா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் தற்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கி வருகிறார். திரில்லர் பாணி படமான இதில் நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாகக் கூறி இயக்குனர் மிஷ்கின் தனது தந்தையிடம் பணம் வாங்கியதாக கூறியுள்ளார் புதுமுக நடிகர் மைத்ரேயா. இதுகுறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மைத்ரேயா கூறியிருப்பதாவது,
" என் பெயர் மைத்ரேயா. இயக்குனர் மிஷ்கின் வெச்சப் பெயர். கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி ஒரு படத்துக்காக ஒப்பந்தம் போட்டோம். அதில் இயக்குனர் மிஷ்கின், நான் ஹீரோ, எனது அப்பா கம்பெனி தான் தயாரிக்கிறது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு பெரிய தொகையை மிஷ்கினுக்கு அப்பா கொடுத்தார்.
முதலில் சவரக்கத்திக்காக மூன்று மாதம் அவகாசம் கேட்டார். பின்னர் துப்பறிவாளனுக்காக மீண்டும் ஆறு மாதம் அவகாசம் கேட்டார். எங்களுக்கு நிச்சயம் படம் செய்வேன் என சத்தியம் செய்தார். இதனால் மிஷ்கின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்.

தற்போது வேறு ஒரு நடிகரை வைத்து படம் செய்வதாக கேள்விப்பட்டேன். நாங்கள் கேட்டபோது, என்னை வைத்து படம் எடுக்க முடியாது எனவும், வாங்கிய பணத்தையும் இப்போதைக்கு தரமுடியாது எனவும் கூறினார்.

சைக்கோ படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை தான். இந்த படத்துக்காக எனக்கு மூன்று வருடங்களாக மிஷ்கின் பயிற்சி எல்லாம் கொடுத்தார். மூன்று வருடமாக இந்த கதைக்காக நான் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன்.
இந்த சமயத்தில் ஐந்து இயக்குனர்கள் வந்து என்னை அணுகினார்கள். சைக்கோவிற்காக காத்திருப்பதால் அவர்களுக்கு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது மூன்று வருடங்களுக்கு பிறகு இப்படி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனது அப்பா மிஷ்கின் மீது பெரிய மரியாதை வைத்திருந்தார். ஆனால் மிஸ்கின் இப்படி செய்தது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என அனைவரும் கூறுகிறார்கள்.
ஆனால் மிஷ்கின் சாருக்கு தெரியும் அவர் என்னிடம் என்ன பேசினார் என்பது. உச்சக்கட்ட நீதிமன்றம் என்பது மிஸ்கின் சாரின் மனசாட்சி தான். அவரது மனசாட்சிக்கே இதை நான் விட்டுவிடுகிறேன்", என மைத்ரேயா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து இயக்குனர் மிஷ்கின் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











