நடிகர் விமல் நடிக்கும் படத்தை தயாரிக்கிறவங்க என் ஆலோசனைய கேளுங்க... தயாரிப்பாளர் திடீர் அறிக்கை
சென்னை: நடிகர் விமல் தனது கடனை திருப்பித் தரவில்லை என்பதால் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தன்னிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அரசு பிலிம்ஸ் கோபி தெரிவித்துள்ளார்.
விமல் ஹீரோவாக நடித்த படம் மன்னர் வகையறா. ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா உட்பட பலர் நடித்திருந்தனர்.
பூபதி பாண்டியன் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

திருப்பித் தரவில்லை
கடந்த 2018 ஆம் ஆண்டு படம் வெளியாகி இருந்தது. ஏ3வி சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்காக நடிகர் விமல், அரசு பிலிம்ஸ் தயாரிப்பாளர் கோபியிடம் ஐந்து கோடியே முப்பத்தைந்து லட்சம் கடனாக பெற்றிருந்தாராம். ஆனால், இந்தப் பணத்தை அவர் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.

மன்னர் வகையறா
இந்நிலையில் அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு அவர் கேட்டுக் கொண்டதால், ஐந்து கோடியே முப்பத்தைந்து லட்சம் கடனாகக் கொடுத்திருந்தேன்.

உத்தரவாதம்
படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பிறகு, ரூ.1 கோடியே 35 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதித் தொகையை படத்தில் நடித்து கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார். அதை நம்பி நானும் பொறுமையாக இருந்து வருகிறேன். ஆனால், மன்னர் வகையறா படத்துக்குப் பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு, எந்தப் பணத்தையும் திருப்பித்தரவில்லை.

ஆலோசனை
நீதிமன்றத் தீர்ப்பின்படி, எனது என்.ஓ.சி இல்லாமல், எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











