ஊழல் பற்றி விஜய் பேசலாமா?.. சம்பளத்தை இப்படித்தான் வாங்குகிறாரா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்!
சென்னை: நடிகர் விஜய் அரசியல்வாதி விஜய்யாக உருவெடுத்ததில் இருந்து அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் அவருக்கு வாழ்த்துகளும் என இரண்டும் சேர்ந்தே வந்து கொண்டு இருக்கின்றது. இதனை விஜய் எதிர் கொள்கின்றாரோ இல்லையோ, விஜய் ரசிகர்கள் இதனை எதிர்கொண்டு பதில் அளிப்பதையும் சில இடங்களில் பதிலடி கொடுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் விஜய் தான் நடித்த படத்திற்கு எப்படி சம்பளம் வாங்கினார் என தயாரிப்பாளர் பேசியது பகீர் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். 69வது படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் தனது 68வது படத்தின் படப்பிடிப்பின்போது தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். இப்படி இருக்கும்போது இரண்டு தினங்களுக்கு முன்னர், அதாவது, அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தி முடித்தார். இதில் 50 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர்.

மாநாட்டு மேடையில் தனது முதல் அரசியல் கன்னிப்பேச்சினைப் பேசிய, விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முழு மூச்சாக செயல்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் முன்பு எப்போதோ அளித்த பேட்டியில் பேசியதை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன், இயக்குநர் ஏ. எல். விஜய்யின் தகப்பனார். தனது மகன் ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்தினை இவர்தான் தயாரித்தார். இந்தப் படத்தில் விஜய் நடித்திருந்தார். மேலும் இந்தப் படம் ரிலீஸ் அனபோது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவால் பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் படம் தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அண்டை மாநிலங்களில் ரிலீஸ் ஆன பின்னர்தான் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் அளித்த பேட்டியில், "தலைவா படத்திற்கு நான் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என உங்களுக்குத் தெரியுமா? சினிமாவில் உட்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் சம்பளத்தை பாதியை செக்-ஆக கொடுப்போம். பாதி சம்பளத்தை பணமாக கொடுத்துவிடுவோம். இல்லையென்றால் 30 சதவீதம் வருமானவரி கட்டவேண்டும். இது வருமானவரி அதிகாரிகளுக்கே தெரியும். நாங்களும் அப்படித்தான் வாங்குவோம், அப்படித்தான் கொடுப்போம்" எனக் எனக் கூறினார்.

சோதனை: தற்போது இந்த வீடியோவை பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனையிடச் சென்றபோது, விஜய்யின் அப்போதைய சம்பளம் ரூபாய் 100 கோடி என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியவந்தது. இதுமட்டும் இல்லாமல் அந்த சோதனையின்போது விஜய்யிடம் கருப்புப் பணம் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் விஜய்யின் 69வது படத்திற்கு அவருக்கு ரூபாய் 275 கோடிகள் சம்பளம் என பேசப்பட்டு வருகின்றது.



Click it and Unblock the Notifications











