மோசடி புகாருக்கு எதிராக நடிகை அனுராதா மானபங்க புகார்: பட அதிபர் கைது

சென்னை தியாகராயநகர், பத்மநாபன் தெருவில் வசிப்பவர் அனுராதா. இவர் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாக வில்லை. இவர் மீது ஸ்ரீதரன் (35) என்ற பட அதிபர், கடந்த மாதம் புகார் கொடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டார், என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோம். இதுமட்டுமல்லாமல் பணம்,சொத்து, நகை என மொத்தம் ஒன்றைரை கோடிக்கு மேல் என்னிடம் இருந்து அனுராதா கறந்துவிட்டார். இப்போது அதை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகார் மனு மீது விசாரணை நடந்து வரும் வேளையில், நடிகை அனுராதா, ஸ்ரீதரன் மீது பதிலடியாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
தன்னை, சேலையை பிடித்து இழுத்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்தார் என்றும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவமானப்படுத்திவிடுவேன் என்று, மிரட்டுவதாகவும், அனுராதா தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது பாண்டிபஜார் போலீசார் சனிக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக வேளச்சேரியில் வசிக்கும் ஸ்ரீதரன் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இரவு 10.30 மணிக்கு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











