ஏவிஎம் சரவணன் உயிரிழப்பு.. தந்தையுடன் வந்த சூர்யா.. கதறி அழுது அஞ்சலி.. இவ்வளவு மரியாதையா?
சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. சரவணனின் உடல் திரைத்துறையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ஏவிஎம் ஸ்டூடியோவில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் நேரில் வந்து அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு பாரம்பரியமிக்க ஏவிஎம் ஸ்டூடியோவை நிர்வகிக்கும் பொறுப்பு அவரது மகனான சரவணனுக்கு வந்தது. இதன் காரணமாக ஏவிஎம் சரவணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். தந்தை போன்றே சரவணனும் ஏவிஎம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். வெறும் தயாரிப்பாளராக மட்டுமின்றி கதை இலாகவிலும் பணிபுரிந்து நல்ல நல்ல கதைகள் தன் நிறுவனத்தில் படமாகும்படி பார்த்துக்கொண்டார்.
ரீ என்ட்ரி கொடுத்த ஏவிஎம்: இடையில் சில காலம் அந்த நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியிருந்தது. அந்த நிலைமையை மாற்றி ஏவிஎம் சரவணன்தான்; சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தை தயாரித்து அந்த நிறுவனத்தின் ரீ என்ட்ரிக்கு காரணமாக அமைந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு 2000களின் ஆரம்பத்தில் மீண்டும் ஃபுல் ஃபார்மில் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தது அந்நிறுவனம்.

மெகா ஹிட்டுகள்தான்: தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட்டாகின. ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி, சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான அயன் என வரிசையாக காலத்துக்கு ஏற்றபடி படங்களை தயாரித்து பட்டையை கிளப்பினார் சரவணன். எப்போதும் கைகள் கட்டியபடி, வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் சாந்தமாக தோற்றமளித்த அவர்; தன் நிறுவனத்துக்காக அதிரடியான பல செயல்களை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு: கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பு பணிகளில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டது ஏவிஎம் நிறுவனம். இடையே அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்திருந்தது. ஆனால் அந்த வெப் சீரிஸ் பெரிய வெற்றியை பெறவில்லை. சரவணனும் வயது மூப்பு காரணமாக அனைத்து பணிகளிலிருந்தும் விலகி முழு ஓய்வில் இருந்தார். ஆனால் அவருக்கு வயோதிகம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
அஞ்சலி செலுத்திய சூர்யா: சரவணனின் உடல் ஏவிஎம் ஸ்டூடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அந்தவகையில் நடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் வந்து சரவணனுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும்போது கலங்கிய சூர்யாவை பார்த்து சரவணன் மீது இவ்வளவு ப்ரியம் வைத்திருக்கிறாரே என்று நெகிழ்ச்சியடைந்தார்கள் அருகில் இருந்தவர்கள்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், "என்னை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்தான். பழனிசாமி என்கிற எனது பெயரை சிவக்குமார் என்று மாற்றியது சரவணன் சார்தான். அவர் நினைவாகத்தான் எனது மூத்த மகனுக்கு சரவணன் என்று பெயர் வைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











