தனிமையில் இருந்த விஷால்.. துணையான தன்ஷிகா.. இப்படித்தான் காதல் வந்ததாம்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஷாலும் நடிகை சாய் தன்ஷிகாவும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரண்டு பேருமே நேற்று வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிவிப்பை கேட்ட பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் அவர்கள் இரண்டு பேரும் காதலில் விழுவார்கள் என்று திரைத்துறையில் 99 சதவீதத்தினர் எதிர்பார்க்கவே இல்லை. இவர்களது இந்த காதல் நீண்ட வருடங்கள் இப்படியே இருக்க வேண்டும் என்றும்; திருமணத்துக்கு பிறகும் ஒருவரையொருவர் காதலோடு அணுக வேண்டும் என்றும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விஷால். முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்த அவர்; செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக விஷாலின் நடிப்புக்கும் நல்ல பெயர்தான் கிடைத்தது. இதனையடுத்து அவர் நடித்த தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. அந்த மூன்று படங்களுமே தரமான ஆக்ஷன் படங்களாக அவருக்கு அமைந்தது. மேலும் விஷால் கண்டிப்பாக பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் என்றே ஆரூடம் கூறப்பட்டது. அதற்கேற்றபடியான கதைகளைத்தான் அவரும் தேர்ந்தெடுத்தார். வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டது.
பொறுப்புகளில் விஷால்: விஷாலை பொறுத்தவரை நடிப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்று நினைக்காதவர். தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டவைகளில் ஏற்பட்ட குளறுபடிகளையும் பிரச்னையையும் தீர்ப்பேன் என்று கூறி; சீனியர்களான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக களமாடினார். அதேபோல் திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி சிடிக்கள் விற்கும் கடைகளுக்கு அதிரடியாக சென்று ரெய்டும் செய்தவர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்யவும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி சில விஷயங்களால் அவர் தொடர்ந்து சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துவந்தார். இருப்பினும் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. இவை ஒரு பக்கம் இருக்க ஏழை குழந்தைகளை படிக்க வைக்கவும் செய்கிறார்.

நீண்ட காலம் கழித்து ஹிட்: இதற்கிடையே விஷாலுக்கு வரிசையாக தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவரது கரியர் அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். சொல்லப்போனால் பாண்டிய நாடு, துப்பறிவாளன் படத்துக்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலைமையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் விஷாலின் கரியரிலேயே மார்க் ஆண்டனிதான் முதன்முறையாக நூறு கோடி வசூலித்த படம் என்ற பெயரையும் பெற்றது. அதனையடுத்து அவர் நடித்த ரத்னம் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
நோ திருமணம்: இது ஒருபக்கம் இருக்க விஷால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். 47 வயதான அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வி அவரின் ரசிகர்களுக்கு இருந்தது. இடையில் ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டி; அதனை திறந்த பிறகுதான் தனக்கு திருமணம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அந்த கட்டட பணிகளும் இப்போது முடியும் தருவாயில் இருப்பதாக தெரிகிறது. எனவே எப்போது விஷால் தனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்ற ஆவல் திரைத்துறையில் அதிகமாகவே இருந்தது.
விஷாலின் அறிவிப்பு: நேற்று யோகிடா திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் விஷால். அப்போது பேசிய அவர், "இங்கு தன்ஷிகாவின் தந்தை இருக்கிறார். அவரது அனுமதியோடு சொல்கிறேன். நான் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். அவரை நான் நன்றாகவே பார்த்துக்கொள்வேன். வெளியில் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தோம். ஆனால் வேறு வழியில்லாமல் இப்போது சொல்லிவிட்டேன். ஆகஸ்ட் 29ஆம் தேதி எனது பிறந்தநாள். அன்றைய நாளில் நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம்" என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார். தன்ஷிகாவும் அதனை அதே மேடையில் உறுதி செய்தார். அவர்களது திருமண அறிவிப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளரான பாலாஜி பிரபு இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஷாலும் தன்ஷிகாவும் க்யூட் ஜோடியாக மாறிவிட்டார்கள். இடையில் விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை, மன ரீதியாக சோர்வடைந்துவிட்டார் என்று பலரும் பேசினார்கள். ஆனால் இப்போது அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்பதை அந்த மேடையை பார்க்கும்போதே தெரிந்தது. அந்தப் பட விழாவில் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில் விஷாலுக்கு தன்ஷிகா சரியான ஜோடி என்று பேசி உறுதிப்படுத்திவிட்டார். விஷால் மொரட்டு சிங்கிளாக இருந்தார். இப்போது கமிட்டாகிவிட்டார். அவருக்கு பல காதல்கள் இருந்தன. ஆனால் இந்தக் காதல்தான் திருமணத்தில் முடியும் சூழ்நிலையில் இருக்கிறது.
விஷாலுக்கு ஏற்பட்ட மனமாற்றம்: விஷாலுக்கு இடையில் நிறைய மனமாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். விஷாலுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை ரொம்பவே இவர் நம்பினார். ஆனால் அவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்கள். இப்போதைக்கு விஷாலுக்கு நண்பர் என்றால் அது ஆர்யா மட்டும்தான். அவர்தான் துணையாக இருக்கிறார். அவரும் திருமணம் செய்துகொண்டார். தற்போது விஷாலும் தனக்கான துணையை தேர்ந்தெடுத்துவிட்டார். அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
நிறைய நஷ்டம்: இடையில் அவர் படங்கள் தயாரித்தார். அந்தப் படங்களால் அவருக்கு பெரிய நஷ்டம் வந்துவிட்டது. துப்பறிவாளன் 2விலும் மிஷ்கினுடன் மோதல் வந்துவிட்டது. இது ஒருபக்கம் இருக்க அவருக்கு மறுபக்கம் கடன் பிரச்னையும் வந்துவிட்டது. அதெல்லாம் சேர்ந்து அவருக்கு மன அழுத்தம் வந்துவிட்டது. இதனால் அதிகம் அவர் தனிமையில்தான் இருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவருக்கும் தன்ஷிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலில் முடிந்திருக்கும். நல்லவிதமாக இந்தத் திருமணம் நடக்க வேண்டும். விஷால் ரொம்ப நன்றாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு காதல் திடீரென்றெல்லாம் நடக்காது. முதலில் இவர்கள் சந்தித்திருப்பார்கள். பிறகு தொடர்ந்து பழகியிருப்பார்கள். இந்தக் காதல் கடந்த சில வருடங்களாகவே இருந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











