மீட்டர் வட்டியில் படம் எடுத்து தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட தயாரிப்பாளர்!
நாகர்கோவில்: மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி கோழி கூவுது என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர், வட்டிக்குப் பணம் கொடுத்த கும்பல் தன்னைஅடாவடியாக மிரட்டுவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தத் தயாரிப்பாளரின் பெயர் ஏ.நாகராஜன். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் நடிகர் அசோக், சிஜோ ரோஸ் என்ற நடிகையை வைத்து கோழிகூவுது என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நாகராஜன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்தான் இவ்வாறு கூறியுள்ளார். நாகராஜன் புகாரில் கூறியிருப்பதாவது...

அடிப்படையில் இரும்பு வியாபாரி
நான் இரும்பு வியாபாரம் செய்து நல்ல வசதியாக வாழ்ந்து வந்தேன். எனக்கு மல்லிகா (33) என்கிற மனைவியும், அஸ்வின்குமார் (8) என்ற மகனும், மிதுனா (5) என்கிற மகளும் உள்ளனர்.

நண்பர்கள் பேச்சைக் கேட்டு
ரூ.75 லட்சம் முதலீட்டில் தரமான சினிமாப்படம் எடுத்துவிடலாம் என்று, என் நண்பர்கள் சிலர் கூறிய ஆலோசனைப்படி சினிமா தயாரிப்பாளர் ஆனேன்.

கோழி கூவுது
நடிகர் அசோக், நடிகை சிஜோரோஸ் ஆகியோர் நடிக்க கோழி கூவுது என்கிற பெயரில் சினிமா படம் தயாரானது.

மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி
ரூ.75 லட்சத்தில் படத்தை முடித்து விடலாம் என்கிற இலக்கு, ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடிந்தது. ரூ.1 கோடியே 75 லட்சம் பணத்தை மீட்டர் வட்டிக்கு வாங்கி படத்தை முடித்திருந்தேன்.

சில நாள்தான் படம் ஓடியது
இந்த படம் 28.12.2012 அன்று வெளியானது. 60 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிலநாட்கள்தான் ஓடியது. படம் தோல்வியை தழுவியதால் எனக்கு கடன் தந்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டினார்கள்.

யாருக்கும் சம்பளப் பாக்கி இல்லை
எனது படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் எந்த சம்பள பாக்கியும் நான் வைக்கவில்லை. மொத்தம் 20 பேரிடம் நான் கடன் வாங்கியதில் 18 பேருக்கு இதுவரை ரூ.50 லட்சம் வரை வட்டி மட்டும் செலுத்தியுள்ளேன்.

கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள்
இந்நிலையில், என்னை என் குடும்பத்தினரோடு தீயில் கொளுத்தி கொலை செய்துவிடுவேன் என கரூரைச் சேர்ந்த ஒருவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த 3 பேரும் மிரட்டி வருகிறார்கள். எனது வீடு தேடி வந்து அவர்கள் தொடர்ந்து மிரட்டுவதால் நான் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.

செத்துக் கொண்டிருக்கிறேன்
எந்த நேரத்திலும் அவர்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்வார்கள் என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். எனவே, மீட்டர் வட்டி கும்பலிடம் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











