தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு.. சிறப்பு அதிகாரி நியமனம்.. கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த கோரி தொடர்ந்த வழக்கில் மீண்டும் புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால் அந்த பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்து மேலும் இவர் ஒரு வருட காலமாக நீடிப்பார் எனவும் அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
சிறப்பு அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒருவருடத்திற்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய சிறப்பு அதிகாரியாக கேகே.மஞ்சுளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால் தயரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வாதிட்டார் தற்போது தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி செந்தில்குமார் தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











