பப்ளிக் விமர்சனத்துக்கு தடை போட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனிமனித தாக்குதலுக்கு கண்டனம்!
சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கங்குவா படத்தின் வசூல் குறைய காரணமே விமர்சனங்கள் தான் என்றும் சினிமா தொழிலை விமர்சனங்கள் பெரிதாக பாதித்து வருவதாக கூறியிருந்தார். தியேட்டர்களுக்கு வெளியே யூடியூப் சேனல்கள் முதல் பிரபல மீடியாக்கள் வரை கங்குவா உள்ளிட்ட பல புதிய படங்களுக்கு பப்ளிக் விமர்சனங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
சிறிய பட்ஜெட் படங்களான வாழை, லப்பர் பந்து உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டு விமர்சனங்கள் மற்றும் மக்களின் கருத்துக்களால் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறின. சமீபத்தில், வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கும் இந்த விமர்சனங்கள் பெரிதும் கைகொடுத்து 300 கோடி வசூலை முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு சாதிக்க உதவி செய்தன.

விஜய்யின் கோட் படத்துக்கு எதிராக பலரும் சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டி பரப்பிய நிலையிலும், அந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி அளவுக்கு வசூல் ஈட்டி சாதனை படைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் தனிமனித தாக்குதல் காரணமாக பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், பெரும் தொகைக்கு படத்தை நம்பி வாங்கிய தியேட்டர் ஓனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யூடியூப் பப்ளிக் விமர்சனத்துக்கு தடை: தியேட்டர்களில் இனிமேல் முதல் நாள் முதல் காட்சியின் போது யூடியூப் சேனல்களும், ஊடகங்களும் மைக்கையும் கேமராவையும் வைத்துக் கொண்டு பொதுமக்கள் விமர்சனம் சொல்கிறோம் என்கிற பெயரில் மக்களின் கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தியேட்டர் ஓனர்கள் ஒருமனதாக இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தியேட்டர் வளாகத்துக்கு உள்ளேயும் தியேட்டர் அருகிலும் பப்ளிக் விமர்சனம் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளனர்.

3 படங்களுக்கு பாதிப்பு: இந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் சூர்யா, திஷா பதானி நடித்த கங்குவா உள்ளிட்ட 3 படங்களும் விமர்சனங்களால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்றும் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஹோட்டலையே எதிர்த்து சண்டை போடுகிறோமா? மற்ற பொருட்கள் வாங்கும் போது அதன் தரம் சரியில்லை என்றால் தட்டிக் கேட்கிறோமா? சினிமாவை மட்டும் சினிமாவாக பார்க்காமல் உங்கள் வாழ்க்கையையே கெடுத்துவிட்டதாக மிகைப்படுத்திய டிராமா விமர்சனங்களால் தான் படங்கள் தோல்வியடைந்து பல நூறு கோடி பாதிப்பை சந்திப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

தனிமனித தாக்குதலுக்கு கண்டனம்: ஒரு படத்தை மட்டும் விமர்சிக்காமல் அந்த படத்தில் நடித்த நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் பாரதிராஜா, செயல் தலைவர் டி.ஜி. தியாகராஜன் மற்றும் பொது செயலாளர் டி. சிவா உள்ளிட்டோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

விமர்சனங்களுக்கு தடை வருமா?: பப்ளிக் விமர்சனத்தை தடை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், மீடியாக்களில் வரும் சினிமா விமர்சனத்துக்கும் 2 வாரம் வரை தடை விதிக்க வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார். அதுபோல விமர்சனங்களுக்கும் தடை வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. பப்ளிக் ரிவ்யூவை தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் ட்விட்டரில் பதிவிடும் விமர்சனங்களை என்ன செய்ய முடியும் என்றும் தரமான படங்களை கொடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











