உதயநிதி புகார்... காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
உதயநிதி அளித்த ரூ 40 லட்சம் மோசடிப் புகாருக்கு பதிலளிக்குமாறு காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நண்பேன்டா படத்துக்காக உதயநிதி கொடுத்த ரூ.40 லட்சம் அட்வான்ஸ் தொகையை காஜல் அகர்வால் திருப்பித் தர மறுப்பதாக உதயநிதி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

ரூ 1.40 கோடி
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அதில் ரூ.40 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் காஜல்அகர்வால் அதில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திருப்பித் தர மறுப்பு
உதயநிதி, நயன்தாரா நடிப்பில் நண்பேன்டா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அட்வான்ஸ் தொகையை உதயநிதி திருப்பித் தருமாறு கேட்டார். காஜலோ மறுத்து விட்டார்.

புகார்
இதையடுத்து ரூ.40 லட்சத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் உதயநிதி புகார் செய்துள்ளார். இந்த புகார் பற்றிய தகவல் தனக்கு வரவில்லை என்றும் வந்த பிறகு நடிகர் சங்கத்தில் உதயநிதி மீது புகார் அளிப்பேன் என்றும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.

நோட்டீஸ்
இந்த நிலையில் உதயநிதி புகார் மீது விளக்கம் அளிக்கும்படி காஜல் அகர்வாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா கூறுகையில், "உதயநிதி அளித்துள்ள புகார் மீது காஜல்அகர்வாலிடம் விளக்கம் கேட்க, காஜல் அகர்வாலுக்கு சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பி உள்ளோம். அவரிடம் இருந்து பதில் வந்ததும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு நடிகர் சங்கம் விசாரித்து சுமுக தீர்வு காணும்," என்றார்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா தோல்வியால்...
காஜல்அகர்வால் தரப்பில் கூறும் போது நண்பேன்டா படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டு திடீரென நீக்கினர். நயன்தாராவை தேர்வு செய்தார்கள். காரணம் கேட்ட போது, காஜல் அகர்வால் நடித்த அழகு அழகு ராஜா படம் தோல்வி அடைந்து விட்டது என்றும் எனவே அவரை நீக்கி விட்டதாகவும் சொன்னார்கள்.

வீணாகிடுச்சி...
நண்பேன்டா படத்தில் நடிக்க 40 நாட்கள் ஒதுக்கி வைத்து இருந்தார். 20 நாட்களுக்கு முன்புதான் நயன்தாராவை ஒப்பந்தம் செய்து விட்டதாக சொன்னார்கள். இதனால் உடனடியாக வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. காஜல்அகர்வால் கொடுத்திருந்த கால்ஷீட் வீணாகி விட்டன. அட்வான்ஸ் தொகையை திருப்பி தர தேவை இல்லை என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையெல்லாம் நடிகர் சங்கத்தில் தெரிவிப்போம்," என்றனர்.


Click it and Unblock the Notifications











