'பாதி விலைக்கு ரிலீஸ் பண்ண ஆள் இருக்கு..' - க்யூபுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்!
Recommended Video

சென்னை : தமிழ் திரையுலகினர் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
க்யூப், யு.எஃப்.ஓ ஆகிய டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி இந்த ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தொடர்ந்துகொண்டேயிருக்கும் ஸ்ட்ரைக்கால், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஸ்ட்ரைக்கை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம்.
இதன் ஒரு கட்டமாக கட்டணத்தைக் குறைக்க மறுக்கும் க்யூப், யு.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு செக் வைக்கும் விதமாக புதிய டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
ஏரோக்ஸ் எனும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிறுவனம் மார்க்கெட்டில் இருக்கும் கட்டணத்தை விட 50% குறைவான கட்டணத்திலேயே சேவை வழங்குகிறதாம்.
இது பற்றி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, "நடைபெற்றுவரும் ஸ்ட்ரைக்கில் இது நல்ல விளைவு. இந்த ஒப்பந்தம் மூலம், இன்னும் பல டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைக்க முன்வரும். இன்னும் மூன்று நிறுவனங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஏரோக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 35 திரையரங்குகளில் தனது சேவையை அளித்து வருகிறது. இந்த முயற்சி சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும், க்யூப் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











