அய்யோ அவருக்கா இப்படி?.. நல்ல மனிதரை இழந்துவிட்டோம்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் வேதனை
சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் முக்கிய தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்க நிர்வாகி மற்றும் நடிகராக அறியப்பட்ட கே. ராஜனின் மரணம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படத் துறையில் நேர்மையான மற்றும் தைரியமான குரலாக அறியப்பட்ட கே ராஜனனின் விபரீத முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கே. ராஜன் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தி சேனலுக்கு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். கே ராஜன் அவரின் மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மிகவும் தைரியமான, தன்னம்பிக்கை மிக்க மனிதர் அவர். எந்தக் கூட்டத்திலும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாகவும் ஆழமாகவும் பேசுவார். தவறுகள் நடந்தால் யாராக இருந்தாலும் எதிர்த்து பேசக்கூடியவர். தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவராக அவர் இருந்தார்.

தனஞ்செயன் உருக்கம்: திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருந்த அவர், நடிகர், தயாரிப்பாளர், சங்க நிர்வாகி என பல்வேறு பொறுப்புகளில் தமிழ் சினிமாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தார். சினிமாவுக்காக உண்மையாக பாடுபட்ட நல்ல மனிதர். சிறு பட்ஜெட் படங்கள் எதுவாக இருந்தாலும், அந்த திரைப்பட விழாவில் தவறாமல் கலந்து கொண்டு, அந்தப் படத்துக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று பேசக்கூடியவர். என்ன காரணத்திற்கான இப்படி ஒரு முடிவை எடுத்தார் என தெரியவில்லை. கே. ராஜன் கடந்த சில மாதங்களாக தனியாகத்தான் இருந்துள்ளார். அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட மனஅழுத்தம் அல்லது தனிமை உணர்வு இருந்ததா என்பது தெரியவில்லை. தமிழ் சினிமா ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது என தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
நல்ல மனிதர்: தயாரிப்பாளர் கே ராஜன் வண்ணாரப்பேட்டையில் இருந்து காரில் அடையாறு ஆற்றங்கரை அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநரிடம் காரை நிறுத்த சொல்லி, நடைப்பயிற்சி செய்வதாக சொல்லி விட்டு நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். என்ன காரணத்திற்காக அவர் இப்படி ஒருமுடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. திரையுலகில் பலருக்கும் ஆதரவாக இருந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சினிமா துறையில் தைரியமாக கருத்து தெரிவிக்கும் குரல்களில் ஒருவராக இருந்த கே. ராஜனின் இழப்பு, தமிழ் திரைப்பட உலகிற்கு பெரிய வெற்றிடமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications