ரஜினியுடன் சூர்யா மோத இதுதான் காரணம்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்.. லாஜிக் இருக்கத்தான் செய்யுது
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதே நாளில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிப்பில் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர்; வாடிவாசல் படத்திலும் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார்.

பிரமாண்ட பட்ஜெட்: இந்தப் படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்ததால் இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார் அவர்.
வரவேற்பை பெற்ற கங்குவா: கோலிவுட்டில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது கங்குவா. படத்திலிருந்து வெளியான க்ளிம்ப்ஸ், டீசர், ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் கண்டிப்பாக கங்குவா படத்தின் வெற்றி அதன் பட்ஜெட் போலவே பிரமாண்டமாக இருக்கும் என்று கணித்திருக்கின்றனர். படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் நன்றாகவே போயிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
வேட்டையன் VS கங்குவா: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த நாளில்தான் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினியுடன் சூர்யா தைரியமாக போட்டியிடுகிறாரே தப்பித்துவிடுவாரா என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் இருவரின் ரசிகர்களுக்கு இடையேயான உரசலும் சமூக வலைதளங்களில் ஆரம்பித்திருக்கின்றன.
தனஞ்ஜெயன் பேட்டி: இந்நிலையில் கங்குவா படம் வேட்டையனுக்கு ஏன் போட்டியாக களமிறங்குகிறது என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் கூறுகையில், "கங்குவா பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். எனவேதான் அந்தப் படத்தை தொடர் விடுமுறையில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்து ஆயுத பூஜை விடுமுறையை தேர்ந்தெடுத்தோம். ஆயுத பூஜையை முன்னிட்டு முதல் ஐந்து நாட்கள் வரை விடுமுறை இருக்கிறது. எனவே அதனை குறி வைத்திருக்கிறோம்.
தமிழில் மட்டும்தான் போட்டி: கங்குவா ஒரு பான் இந்தியா படம். பல மொழிகளில் வெளியாகிறது. தமிழில் மட்டும்தான் வேட்டையன் திரைப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகிறது. ஆனால் மற்ற மொழிகளில் வேறு எந்த படமும் கங்குவா படத்தோடு வெளியாகவில்லை. எனவே தமிழில் மட்டும்தான் எங்களுக்கு வேட்டையன் போட்டியாக இருக்கிறதே தவிர மற்ற எந்த மொழியிலும் போட்டி இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











