Vijay 68 - விஜய் - வெங்கட் பிரபு இணையும் படம் அரசியல் படமா?.. தயாரிப்பாளர் கொடுத்த பதில்
சென்னை: Vijay 68 (விஜய் 68) விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையும் படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருக்கிறார்.
விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பதியில் விறுவிறுப்பாக நடந்துவரும் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்பே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய்.

வெங்கட் பிரபு: அதன்படி அவரது 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்துக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்துக்கு இசையமைக்கிறார். மாநாடு என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்குவதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் 22ஆம் தேதியே படத்துக்கான பூஜை போடப்பட வேண்டியது. ஆனால் ஏதோ காரணத்தால் அது நடக்காமல் போனது.
கதை விவாதம்: கஸ்டடி படத்தின் ரிலீஸுக்கு முன்பே விஜய்யிடம் இந்தப் படத்தின் ஒன்லைனை கூறிவிட்டார் வெங்கட் பிரபு. தற்போது அதை டெவலப் செய்யும் வேலையில் தனது உதவியாளர்களுடன் தீவிரமாக இறங்கியிருக்கிறார் வெங்கட். இருப்பினும் ஒன்லைனை திருப்தி வரும்படி டெவலப் செய்ய வெங்கட் பிரபு & டீம் திணறுவதாகவும் வெளியிலிருந்து கதை வாங்கி இயக்கும் ஒரு ஆப்ஷனிலும் அவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை?: விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைகிறார் என்றதுமே எந்த மாதிரியான கதை இதில் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கணிக்க தொடங்கியிருக்கின்றனர். அதன்படி இது அரசியல் படம் என முதலில் கூறப்பட்ட சூழலில்; இல்லை இல்லை தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஈகோவும், எமோஷனலும்தான் கதை என லேட்டஸ்ட்டாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் படம் வரும்வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விஜய் 68 படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தனஞ்ஜெயன் பேட்டி: அந்தப் பேட்டியில் அவரிடம் விஜய் - வெங்கட் பிரபு படம் அரசியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு விழா வைத்தவுடன் எல்லோரும் வந்து அதை தொடர்புபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அவர்களுக்கே தெரியாத ஒரு கதை எல்லாம் செய்வார்கள். அதாவது அரசியல் படம் பண்ண வேண்டுமென்று வெங்கட் பிரபுவே இதை முடிவெடுத்து இருப்பாரா? என தெரியாது.
யாருக்கும் எதுவும் தெரியாது: உண்மையாகவே என்ன கதை, எப்போது என்ன பண்ணப் போகிறார்கள், எதுவுமே யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் வரும்போதோ அல்லது டைட்டில் வரும்போதோதான் அதைப் பற்றி நம்மால் கொஞ்சம் யூகிக்க முடியும். இதுவரை அது மாதிரி எதுவுமே வராதபோது இது ஒரு அரசியல் கதையாக இருக்கப் போகிறது என சொல்கிறார்கள்.
விளக்கம்: இன்னும் சொல்லப்போனால் விஜய் மூன்று வருடங்களுக்கு எந்தப் படத்திலும் நடிக்கப்போவதில்லை என்ற வதந்தி பரவியது. உடனே விஜய் தரப்பும் விளக்கம் அளித்துவிட்டது. மொத்தமாக அவரைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரைக்கும் இது எல்லாமே வதந்திகள்தான். என்னைப் பொறுத்தவரை விஜய் ஒட்டு மொத்தமாக ஒரு அரசியல் படத்தை பண்ணமாட்டார். அவருக்கு குழந்தைகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். எனவே முழுக்க முழுக்க அரசியல் படம் செய்தால் அது அடிபட்டுப்போகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











