Vijay - விஜய் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார்.. ஆருடம் சொல்லும் தயாரிப்பாளர்.. நடக்குமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அநேகமாக அவரது கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்திருக்கும் பேட்டி விஜய் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT (Greatest Of All Time)படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
கடைசி படம்: அவரது 69ஆவது (கடைசி படம் என்று கூறப்படுகிறது) படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "69ஆவது படம் விஜய்க்கு கடைசி படம் எல்லாம் இல்லை. ஒரு சின்ன பிரேக் எடுக்கப்போகிறார் அவ்வளவுதான். அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும். விஜய்யும், வெற்றிமாறனும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.
மீண்டும் வருவார்: விஜய்யை நாம் பெரிதாக எல்லாம் மிஸ் செய்யமாட்டோம். 2025ஆம் ஆண்டு விஜய்யின் 69ஆவது படம் கண்டிப்பாக ரிலீஸாகிவிடும். அதன் பிறகு 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வேலைகளை அவர் கவனிப்பார். அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைந்துவிட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவைப்பார். அப்படி நடக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார் அவ்வளவுதான்' எண்றார்.


Click it and Unblock the Notifications











