சொந்தமா சிந்திக்கவே மாட்டீங்களா? சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க? தயாரிப்பாளர் ஆவேசம்
சென்னை: சினிமா டைட்டில்களை டிவி சீரியல்களில் பயன்படுத்துவதற்கு தயாரிப்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா, தாலுபுதுசு, கவலைப்படாதே சகோதரா, காதல் ரோஜாவே உட்பட சில படங்களை இயக்கியவர் கேயார். சில படங்களை தயாரித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவரான இவர், பல படங்களை வினியோகமும் செய்துள்ளா.

தலைப்பு முக்கியமானது
இவர் சினிமா டைட்டில்களை டிவி சீரியல்களில் பயன்படுத்த கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டிவி தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. ஒரு படத்துக்கு தலைப்பு முக்கியமானது.

அதுதான் அங்கீகாரம்
அதுதான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தலைப்புதான் அங்கீகாரம். சில தலைப்புகளால் மக்கள் ஆர்வத்துடன் முதல் நாளே படம் பார்க்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு. சில நேரங்களில் தலைப்பு பிரச்னை, பெரிய பஞ்சாயத்தாக விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம் வரை சென்று படத்தின் வெளியீட்டைக் கூட தடை செய்திருக்கிறது.

சர்வ சாதாரணமாக
ஆனால், டிவி தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. என் முதல் படமான ஈரமான ரோஜாவே, புதுமுகங்கள் நடித்து நான் தயாரித்து இயக்கிய படம். 1991-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்தப் படத்துடன் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படமும் மற்ற ஏழு படங்களும் வெளியாயின.

தர்மமில்லை
அந்தப் போட்டியிலும், ஈரமான ரோஜாவே 125 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.தற்போது, என் படத்தின் தலைப்பை கூகுளில் தேடினால், அந்த தலைப்பில் தமிழ் சீரியல் தான் முதலில் வருகிறது. இதுமட்டுமில்லாது என் மற்ற படங்களின் தலைப்புகளையும் தொடர்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது நியாயமுமில்லை தர்மமும் இல்லை.

சுயமாக சிந்திக்க
என் படத்தின் தலைப்புகளைப் போலவே மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் தலைப்புகளையும் தொடர்களில் பயன்படுத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் சீரியல் எடுப்பது என்பது மிக வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கு உரியது.
தொடர்களுக்கும், தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இதற்காக நீதிமன்றத்தை அணுக உள்ளேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











