'அரண்மனை- 2'க்கும் சிக்கல்... தடை கோரி வழக்கு... சமரச மையத்தில் போய்ப் பேசுங்க.. நீதிபதி உத்தரவு
சென்னை: சுந்தர்.சி. இயக்கியுள்ள அரண்மனை - 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.ஜி இயக்கத்தில் வெளியான பேய்ப்படம் அரண்மனை. ஹன்சிகா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடியது.
முன்னதாக அரண்மனை படம் ரஜினி நடித்த தனது ஆயிரம் ஜென்மங்கள் கதையை ஒத்திருப்பதாகக் கூறி, அப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது

அரண்மனை -2...
இந்நிலையில், தற்போது அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இப்படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது.

புதிய வழக்கு...
தற்போது இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்...
அந்த மனுவில் அவர், ‘‘அரண்மனை-2' என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆயிரம் ஜென்மங்கள்...
என்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதியின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு உத்தரவு...
இந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











