Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
சென்னை: தமிழில் சில்லுன்னு ஒரு காதல் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் இவர் 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அடுத்ததாக சூர்யா -சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தையும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளார்.
ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைகள் திருட்டு போனது, இது தொடர்பாக கடந்த 14ம் தேதி அவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். நகை திருட்டு குறித்து அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா: தமிழில் ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ஞானவேல் ராஜா. கார்த்தி நடிப்பில் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழில் தயாரிப்பாளராக இவர் அறிமுகமானார். இதையடுத்து சிங்கம், நான் மகான் அல்ல, பிரியாணி, பத்து தல போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார், தற்போது சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தையும் இவர் தயாரித்து முடித்துள்ளார், விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஞானவேல் ராஜா வீட்டில் திருட்டு: கடந்த சில தினங்களுக்கு முன்பு தி நகரில் உள்ள ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் கொள்ளை போனது. தான் தன்னுடைய மனைவி நேகாவிற்கு அளித்திருந்த தங்க பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை காணாமல் போனதாக கடந்த 14ம் தேதி மாம்பலம் போலீசில் புகார் அளித்திருந்தார். நகை திருட்டு குறித்து அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்போது நகைகளை தான் திருடவில்லை என்று லட்சுமி தொடர்ந்து கூறியதாகவும் ஆயினும் விசாரணைக்கு வருமாறு போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
பணிப்பெண் தற்கொலை முயற்சி: இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்ததால் மன உளைச்சலில் இருந்த பணிப்பெண் லட்சுமி, தன்னுடைய வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி நகரில் உள்ள வீட்டில் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தன்னுடைய பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
ஞானவேல் ராஜா -நேஹா மீது புகார்: இவரது வீட்டில் தான் லட்சுமி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஞானவேல்ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீது தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லட்சுமியின் மகள் இந்த புகாரை கொடுத்துள்ளார். அதில் நேஹா தன்னுடைய நகைகளை எங்கோ தொலைத்துவிட்டு தன்னுடைய தாயார்மீது பழி போடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











