சிம்புவுக்கு வந்த புது சிக்கல்.. தக் லைஃப் படத்துக்கும்தான்.. தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் ஃப்ரீ ஹிட்டில் விளையாடுபவர் சிக்ஸ் அடிப்பவர். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருந்தன. அவரை சூழ்ந்த பிரச்னை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்: உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்வரன் கைகொடுக்கவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடுக்கு கூட்டம் அலைமோதியது. அதன் காரணமாக படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. எனவே வின்டேஜ் சிம்பு மீண்டும் வந்துவிட்டார் என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
வெந்து தணிந்தது காடு: அதேபோல் மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது. எனவே இனி சிம்புவுக்கு சறுக்கலே கிடையாது என்ற நம்பிக்கை பலமாக பிறந்தது அவரது ரசிகர்களுக்கு.
பத்து தல: இப்படிப்பட்ட சூழலில் மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல படத்தில் நடித்தார். கன்னடத்தில் மெகா ஹிட்டடித்தாலும் தமிழில் சொதப்பியது. இருப்பினும் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு பத்து தல சின்ன சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சறுக்கலை அடுத்தப் படத்தில் சரி செய்துவிடுவார் என நம்பலாம். சிம்புவின் அடுத்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
தக் லைஃப்: இதற்கிடையே கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் தக் லைஃப் படத்திலும் சிம்பு நடிக்கிறார். படத்தில் சிம்புவின் கேரக்டர் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சிம்பு ஸ்டன்னிங் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்புவுக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது.
என்ன ஆச்சு: அதாவது, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்திருக்கிறார். அதில், "மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக்கொடுக்கவில்லை. அதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது சிம்புவுக்கு மட்டுமின்றி தக் லைஃப் படத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சிம்பு மீது இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் படத்தில் நீடிக்க முடியாத நிலைமை உருவாகும். ஏற்கனவே சிம்புவை வைத்து காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்னை: முன்னதாக, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. ஆனால் அந்தப் படம் குறித்த எந்தப் பேச்சும் இதுவரை எழவில்லை. அந்தப் படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. அதற்கு சிம்புவுக்கு 9 கோடி ரூபாய்வரை சம்பளம் பேசப்பட்டு 4 கோடி ரூபாய்வரை பணம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சிம்புவோ கொரோனா குமார் படத்தை தவிர்த்து மற்ற படங்களில் நடித்துவருகிறார் எனவும் அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











