Isari Ganesh: அண்ணன் -தம்பிக்குள்ள ஏற்பட்ட பிரச்சினை மாதிரிதான்.. சிம்பு குறித்து பேசிய ஐசரி கணேஷ்!
சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டித்தது வெந்து தணிந்தது காடு. படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சிம்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கமல் தயாரிப்பில் நடிக்க சிம்பு கமிட்டாகியுள்ளார்.

சிம்பு உடனான பிரச்சினை குறித்து பேசிய ஐசரி கணேஷ்: நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படங்கள் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் பத்து தல படம் வெளியானது. இந்தப் படம் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்தப்படத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். இவர்களின் பிரச்சினை மிகுந்த அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. சிம்பு தன்னுடைய தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்புதல் அளித்து பணம் பெற்றதாக ஐசரி கணேஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சிம்பு -இயக்குநர் கோகுல் கூட்டணியில் முன்னதாக அறிவிக்கப்பட்ட கொரோனா குமார் படத்தை விரைவில் துவங்கவேண்டும் என்பது ஐசரி கணேசின் திட்டமாக உள்ளது. ஆனால் படத்தில் கோகுல், தானும் முக்கியமான கேரக்டரில் நடிப்பேன் என்று கூறியதால், சிம்பு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐசரி கணேஷின் புகாரால் சிம்பு -கமல் கூட்டணியில் உருவாகவுள்ள சிம்பு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சகோதரர்கள் இடையில் சிறிய சிறிய பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் தனக்கும் சிம்புவிற்குமான பிரச்சினையும் அதுபோலத்தான் என்று ஐசரி கணேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஒன்றாக உட்கார்ந்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். சிம்பு மேலும் மேலும் சிறப்பாக உயர வேண்டும் என்றும் பல உயரங்களை தொட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 32 ஆண்டுகளாக டி ராஜேந்தரை தனக்கு நன்றாக தெரியும் என்றும் தாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர்கள் மீது எந்தவிதமான ஏமாற்றமும் தனக்கு இல்லை என்றும் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி சிம்பு 16 கோடிகள் வரை வாங்கியுள்ளதாக ஐசரி கணேஷ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











