விஜய் பயந்துவிட்டார்...மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை.. சீண்டும் பிரபல தயாரிப்பாளர்
சென்னை: நடிகர் விஜய் தனது படங்களில் மத்திய அரசு குறித்து விமர்சிப்பதே இல்லை என பிரபல தயாரிப்பபாளர் சீண்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் கே ராஜன். தமிழ் திரைத்துறையில் பல படங்களை தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். முன்னணி நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் என பலர் குறித்தும் தடாலடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சின்மயிக்கு மேடையிலேயே மிரட்டல்
கடந்த 2001ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கொத்தண்ட ராமையாவை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு எட்டுத்திக்கும் பற படத்தின் ஆடியோ லாஞ்சில் பாடகி சின்மயியை, வைரமுத்து விவகாரம் தொடர்பாக மேடையிலேயே மிரட்டி பேசினார்.

பலர் குறித்தும் விமர்சனம்
மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் என பலரையும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடிகை த்ரிஷாவை திமிர் பிடித்தவர் என்றும் நடிப்பதற்கு கற்றுக்கொள்ளவில்லை ஆனால் சம்பளத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போகிறார் என்று விளாசினார்.

விஜய் குறித்து விளாசல்
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்யை சீண்டியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரூ.2000 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை வருவது இயல்புதான்
இப்படத்தில் 2016ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பான ஒன்றுதான் என்றார்.

விஜய் பயந்து விட்டார்
மேலும் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சலை கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை... விஜய் பயந்து போய் விட்டார்.

ஆண்மை போய்விடுகிறது
ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்றார். தயாரிப்பாளர் கே ராஜனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











