85 வயதில் இப்படி ஒரு முடிவா? 43 ஆண்டு திரைப்பயணத்தை முடித்துக்கொண்ட கே. ராஜன்
சென்னை: தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட கே. ராஜன் இன்று விபரீதமான ஒரு முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். சினிமா துறையில் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக இருக்கும் கே. ராஜன், திரைத்துறையில் நுழைந்தது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரபல தயாரிப்பாளர்: கே. ராஜன் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பிறந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் 1983 ஆம் ஆண்டு 'பிரம்மச்சாரிகள்' என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கே. ராஜன், 1991 ஆம் ஆண்டு 'நம்ம ஊரு மாரியம்மா' என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து, இயக்குநர் செந்தில்நாதனுக்காக 'தங்கமான தங்கச்சி' என்ற படத்திற்கு எழுத்தாளராகப் பணியாற்றினார். கே. ராஜன் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் 'பாம்பு சட்டை', 'துணிவு', 'பகாசூரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மகனை நடிகராக்கினார்: இப்படி சினிமாவில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருந்த கே. ராஜன், தனது மகன் பிரபுகாந்தை 'அவள் பாவம்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதோடு, பிரபுகாந்த் 'டபுள்ஸ்' படத்தில் வில்லனாகவும் நடித்தார். ஆனால் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாததால், சில நாட்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த பிரபுகாந்த், ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் நடித்த 'எல்.கே.ஜி' என்ற வெற்றிப்படத்தை தயாரித்துள்ளார்.
85 வயதில் இப்படி ஒரு முடிவா: ஆனால், கே. ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா, பட நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு பேசி வந்த இவர், இன்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே. ராஜன் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 85 வயதில் இப்படி ஒரு முடிவை எடுத்துக்கொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: வாழ்க்கையின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. அது நம்மை நேசிப்பவர்களுக்கு ஆறாத வடுக்களையே தரும். மனபாரம் அதிகமாகும்போது, தகுந்த நபர்களிடம் பேசிப் பகிர்வதே புத்திசாலித்தனம். துணிவோடு எதிர்கொண்டால் எந்த சவாலையும் வெல்லலாம். நம் உயிர் விலைமதிப்பற்றது, வாழ்ந்து காட்டுவோம்!
இலவச மனநல உதவி எண்கள்:
சினேகா (Sneha Helpline): 044-24640050
மத்திய அரசு உதவி எண் (KIRAN): 1800-599-0019
மாநில அரசு உதவி எண்: 104 எண்களை தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications