சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தோல்விக்கு இவர்தான் காரணம்… தயாரிப்பாளர் சொன்ன பதிலால் ஆடிப்போன பிரபலம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
பிரின்ஸ்க்கு முதல் நாளில் மட்டுமே நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், நெகட்டிவான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்தது.

தீபாவளி ரிலீஸில் பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். கமர்சியலாக உருவாகியிருந்த பிரின்ஸ் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் பிரின்ஸ் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர் கருத்து
இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு இயக்குநர் தான் காரணம் என பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். குருமூர்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு இயக்குநர் தான் காரணம். மேலும், அதற்கு செலவு செய்த தயாரிப்பாளர்களும் கதாசிரியர்களும் தான் காரணம் என சொல்ல முடியும். அதேபோல், ஒரு படம் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குநர் தான் காரணம். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றன. ஆனால் அதன்பிறகு தற்போது வெளியான பிரின்ஸ் வெற்றி பெறவில்லை. அதற்கு அந்த இயக்குநர் தான் காரணம்" எனக் கூறியுள்ளார்.

கலக்கத்தில் இயக்குநர்
தயாரிப்பாளர் கே ராஜனைப் போன்றே ரசிகர்கள் பலரும் இயக்குநர் அனுதீப் தான் பிரின்ஸ் தோல்விக்கு காரணம் என கூறி வருகின்றனர். ஜதி ரத்னலு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த அனுதீப், சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூப்பர் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவரோ கதையில் கவனம் செலுத்தாமல், மேக்கிங்கிலும் சொதப்பிவிட்டதாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில், பிரின்ஸ் தோல்வியில் தொடர்ச்சியாக தன் மீதே விமர்சனம் வருவதால், இயக்குநர் அனுதீப்பும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்
பிரின்ஸ் படத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள் தியேட்டர் ஆடியன்ஸை குறைத்துவிட்டது. இதனால், உடனடியாக படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் வரும் 25ம் தேதி (நவ 25) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படம் வெளியாகி ஒரே மாதத்தில் பிரின்ஸ் ஓடிடியில் வெளியாகவிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரம் பிரின்ஸுடன் ரிலீஸான சர்தார், இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











