என் வீட்டு வாசலில் ஷாலினியுடன் காத்திருந்தவர் அஜித்.. மனம் திறந்த தயாரிப்பாளர்
சென்னை: நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் தனது வீட்டு வாசலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்ததாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமாவில் யாருடைய துணையும் இல்லாமல் நுழைந்தவர் அஜித்குமார். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பெரும் சோதனைகளை சந்தித்தவர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

கோலிவுட்டில் டாப் ஹீரோவான அஜித்குமார்
90களில் களமிறங்கிய அஜித் இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். தனது கேரியரின் ஆரம்பகாலத்தில் ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி என பல ஜானர்களில் நடித்தவர். குறிப்பாக தான் வளர்ந்துவரும் நேரத்திலேயே வாலி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தினார். அதுவரை யாரும் செய்யாத ரிஸ்க் என்று பலரும் கூறுகின்றனர். தொடர்ந்து தோல்விகள், வெற்றிகள் என மாறி மாறி கொடுத்த அஜித் சமீபத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

கோலிவுட்டில் அஜித் பின்பற்றும் ஃபார்முலா
நடிகர்கள் அனைவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள். அதுதான் அவசியமும்கூட என்ற விதியும் இருந்தது. அஜித்தும் ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என வழக்கமான நடிகர்கள் போலவே இருந்தார். ஆனால் அவருக்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ, பேட்டிகள் கொடுப்பதோ, படத்தின் ப்ரோமோஷனில் பங்கெடுப்பதோ இல்லை. அவரது இந்த ஃபார்முலா அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிலரால் விமர்சிக்கவும்படுகிறது. ஆனால் தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார் அஜித். அதேசமயம் ஏதேனும் ஒரு துக்கம் நிகழ்ந்தால் அதில் பெரும்பாலும் பங்கெடுத்துக்கொள்கிறார் அஜித்.

அஜித் குறித்து தாணு கூறிய தகவல்
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு அஜித் குறித்து சொல்லியிருக்கும் விஷயத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அஜித் குறித்து பேசிய தாணு, 'எனது மனைவி சிங்கப்பூரில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நீண்ட நேரம் ஆனது. அந்த சமயத்தில் எனது வீட்டுக்கு வந்த அஜித்தும், ஷாலினியும் வாசலிலேயே இரண்டரை மணி நேரம் காத்திருந்தார்கள்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இதனை தெரிந்துகொண்ட அஜித் ரசிகர்கள் எந்தெந்த விஷயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அஜித்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
கலைப்புலி தாணு பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். இவர்தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதல்முதலாக வழங்கியவர். ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்தவர். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் தயாரித்த அசுரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











