கலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டும்.. தாணு வாழ்த்து!
சென்னை: கலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டுமென பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் திமுக மட்டும் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

ஸ்டாலினுக்கு வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கலைஞரின் பொற்கால ஆட்சி
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டுமென கலைப்புலி தாணு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கலைஞரின் பாடசாலையில்
"அரைநூற்றாண்டு பொதுவாழ்வில் கலைஞரின் பாடசாலையில் பயின்று சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று கடந்த காலங்களில் கட்சித் தலைமையோ, ஆட்சித் தலைமையோ ஏற்று பெறாமல் கலைஞர் ஆசியுடன் மக்கள் தந்த மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சியில் நல்லாட்சி தந்து ஏற்ற பொறுப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பான நிர்வாகம் தந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் பாராட்டை பெற்றீர்கள்.

உலகமே உற்று நோக்கி..
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக நமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா, திட்டங்கள் மூலம் நம் தாய் மண்ணில் உங்கள் பாதங்கள் தடம் பதிக்காத இடமே இல்லை எனும் அளவில் பயணம் செய்து மக்களின் மனங்களை வசப்படுத்தி, அதீத அன்பால் சாத்தியப்படுத்தி விட்டீர்கள். மாநிலம் தழுவிய கிராமசபை கூட்டங்களில் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று அதன் தீர்வுக்காக தனி அமைச்சகம் உயர் அதிகாரிகளையும் நியமிக்க இருப்பதை காண உலகமே உங்களை உற்று நோக்கி காத்திருக்கிறது.

வழி வகுத்துத் தாருங்கள்
கலைஞருக்கு பிறகு கழகத்துக்கு தலைமை ஏற்று கட்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி பெருந்தொற்று காலத்திலும் மேற்கொண்ட பயணங்களால், தமிழக மக்கள் மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள். கலைஞரை போன்று கலைத்துறையிலும் தனி கவனம் செலுத்தி அந்தக் துறையை மிகச் சிறப்பாக செயல்பட வழி வகுத்துத் தாருங்கள்.

உங்கள் ஆளுமையின் ஆழம்
கூட்டணி அமைப்பதிலும் கட்சித் தலைவர்களை சந்திக்கும் போதும் கருத்து பரிமாற்றங்கள் நிகழும் போதும் கடுஞ்சொற்கள் பயன்படுத்தியதாக யாரிடமிருந்தும் எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இதுவே உங்கள் ஆளுமையின் ஆழத்தை மிக அழகாக அற்புதமாக அரங்கேற்றி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நெடிய பயணத்தில் கண்ட நீங்கள் ஆட்சிப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் துறை சார்ந்த நிர்ணயத்துவத்தைப் பயன்படுத்தி உங்கள் தலைமை சிறப்பு கடந்த காலத்தில் நீங்கள் செயல்பட்டதை அறிந்தவர்கள் இன்றும் பாராட்டி மகிழ்கின்றனர்.
முத்திரை பதிக்க வேண்டும்
உங்களின் கடின உழைப்பு, மனம் கவரும் வியூகங்கள் திமுகவுக்கு தனி பெரும்பான்மையும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையையும் பெற்று தமிழக மக்களின் லட்சிய பிம்பமாக தமிழக இளைஞர்களின் சுடரொளி ஆக வெளிச்சம் பாய்ச்சி, கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுக்க வருங்கால தலைமுறைக்கான தலைவர் என்ற முத்திரை பதிக்க வேண்டுகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











