பாட்டாளி மகன் பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார்.. தொடரும் தயாரிப்பாளர்கள் மரணம்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: தமிழ் சினிமாவில் வரிசையாக காமெடி நடிகர்கள் மரணம் ஏற்பட்டு பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமீப காலமாக தொடர்ந்து தயாரிப்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருவது தமிழ் சினிமாவை மீண்டும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி, தனது 69 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி மீண்டும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'பாட்டாளி மகன்', 'விக்னேஷ்வர்', 'மாசி', 'மிஸ்டர் மகாராணி' போன்ற பல படங்களைத் தயாரித்த இவர், நடிகர் அர்ஜுனின் மேலாளராகவும் பணியாற்றியவர் ஆவார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை மணி, இன்று (மே 23, 2026) அதிகாலையில் இயற்கை எய்தினார். இத்தகவலை அவரது தம்பி செல்வம் உறுதிப்படுத்தினார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அஞ்சலிக்காக அவரது உடல், சென்னை, கூடுவாஞ்சேரி அருகேயுள்ள சாய்ராம் பேடு, எஸ்.என். கார்டன், பிளாட் எண் 20/21 முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications