Lalith kumar on Vijay: தப்பாச்சுன்னா உன்னை பாத்துக்கறேன்.. லலித்குமாருக்கு விஜய் எச்சரிக்கை!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
முதல் நாளிலேயே இந்தப் படத்தின் வசூல் 148 கோடி ரூபாயை சர்வதேச அளவில் எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இது சாத்தியமில்லை என்று தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

லலித்குமாரை எச்சரித்த விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் சர்வதேச அளவில் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ள போதிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆயினும் முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச அளவில் பெற்றுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சோலோவாக ரிலீசாகியுள்ள லியோ படம், அடுத்தடுத்து ஆயுதபூஜை உள்ளிட்ட விடுமுறை கொண்டாட்டத்தில் மேலும் வசூலை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், வட இந்தியாவில் இந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது சாத்தியமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
லியோ படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்க்கு பிரம்மாண்டமான பரிசை அளிக்க தான் விரும்புவதாக லலித்குமார் கூறியுள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்தே விஜய்க்கு பரிசளிக்க தான் விரும்பி கேட்டதாகவும், அவர் சம்பளம்தான் கொடுத்துள்ளாயே, பரிசெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் இல்லாததால் 2 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு படையெடுத்ததை சுட்டிக் காட்டிய லலித்குமார், இதனால்தான் தான் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாடியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் விஜய் தலையிடவில்லை என்றும் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அவர் ஆலோசனை வழங்கியதாகவும் லலித்குமார் கூறியுள்ளார். ஆனால் மற்ற மாநிலங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்க தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியான ரிலீசைதான் விஜய் விரும்பினார் என்றும் அதனால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார். மாஸ்டர் ரிலீசின்போதே தப்பாச்சுன்னா வாசல்ல நிக்க மாட்டேன் என்று தான் விஜய்யிடம் கூறியதாகவும் அதற்கு அவர், தப்பாச்சுன்னா உன்னை பார்த்துக்கறேன் என்று பதிலளித்ததாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் மாஸ்டர் படம் 100 சதவிகிதம் சிறப்பாக வெளியானதால்தான் தன்னை கூப்பிட்டு லியோ படத்தின் வாய்ப்பை அவர் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











