மகாராஜா கதை திருட்டுக் கதை?.. நித்திலன் சாமிநாதன் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மருதமுத்து பகீர்!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் தன்னுடைய கதை என்றும் அதை நித்திலன் சாமிநாதன் திருடி விஜய் சேதுபதியை வைத்து படமாக்கி வெற்றி பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் மருதமுத்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, திவ்யபாரதி, அருள்தாஸ், முனிஷ்காந்த் என பல பிரபலங்கள் நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் 85 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

படம் வெளியாகி பல நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த படத்தின் கதை திருட்டு கதை என்றும் நித்திலன் சாமிநாதன் தன்னை ஏமாற்றி படம் எடுத்து விட்டதாக தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு கதை சர்ச்சை: தமிழ் சினிமாவில் வெற்றி அடையும் படங்கள் பல திருட்டு கதை சர்ச்சையில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளன. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்துக்கும் தற்போது திருட்டு கதை சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

நித்திலன் சாமிநாதன் திருடி விட்டார்: கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த கதை தன்னிடம் வந்தது என்றும் இந்த கதையை வைத்து நித்திலன் சுவாமிநாதனிடம் குறும்படம் ஒன்றை இயக்கக் கூறி பணம் கொடுத்தேன். அவளும் குறும்படத்தை இயக்கினார். அதன் பின்னர் இந்த கதையை படமாக்குவதற்காக பதிவு செய்து வைத்திருந்தேன். கே.எஸ். ரவிக்குமார், சார்லி, அப்புக்குட்டி உள்ளிட்டோரை வைத்து படமாக்க நினைத்தேன். ஆனால், என்னுடைய முதல் படமான அத்தியாயம் 1 படத்தை இயக்கும் பணியில் இருந்ததால் இந்த படத்தை ஆரம்பிக்கவில்லை. தற்போது இந்த படத்தை ஆரம்பிக்கும் வேலைகளை செய்து வந்தபோது, மகாராஜா என்கிற பெயரில் இந்த படம் உருவாகி ரிலீஸ் ஆகிவிட்டது என என்னுடைய நண்பர்கள் சொன்னதும் அதிர்ச்சியாகிவிட்டது. நித்திலன் சாமிநாதன் என்னை ஏமாற்றி என்னுடைய கதையை வைத்து படம் செய்து விட்டார் என கடுமையான வார்த்தைகளால் திட்டி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என பேசியுள்ளார்.
பாரதிராஜா, பாக்கியராஜிடம் முறையிட்டேன்: இயக்குநர் சங்கத்தின் தலைவர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களிடம் இது தொடர்பாக முறையிட்டு உள்ளேன். ஆனால் என்னைப்போல சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காக பலர் சினிமாத் துறையில் மோசடி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த படத்தை நான் தான் உருவாக்க இருந்தேன். ஆனால், அதற்குள் இப்படி என்னை ஏமாற்றி விட்டார்கள் என தயாரிப்பாளர் மருதமுத்து குற்றம் சுமத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











